சங்கு

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்.

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுத்தி சேர்ந்திடநாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்.

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 5:55 pm)
பார்வை : 23


மேலே