இதுவொன்றும் முடிவல்ல.........!

உன் இதயம் உறங்க
என் இதயம் கிறங்குவது
சொர்க்கத்தின் நிச்சயப்போ
இரையாவது நான்
இளைக்கும் நம் காதலுக்கு .............!

உள்மனம் துடித்தால் மட்டும்
உணர விழைகிறாய்
உடன் பயணிக்க நினைத்தால்
உடுத்திக்கொள்ள பிரிவா ??
விளக்கமற்றவனே ........!

என் உயிர்கொடுக்கும்
தந்திகள் படிக்க தாமதமா
உன்னவளாய் உறைந்துகொள்ள
காலமே காலனானால் – என்
பாசக் கயிறும் அறுந்துவிடுமோ.......?!

இலக்கியக் காட்டில்
குடிலமைத்துக் குளிர்காயும்
சூழ்நிலை எனதில்லை
பனிக்கற்றைகளாய்ப் படிந்துவிட்ட
உன் நினைவுகளால்.............!

இழுபறியாய் இழுக்கும்
இலவம் பஞ்சே
நீயோ இத்துனை கனமா ??
நெருடும் பொழுதுகளை
வருடுமென் பூங்காற்றே.........!

யாரெனக் கண்டும்
காணாதவளாய் உருக
நீயோ காயப் பரிசு தர
தலைமைப் பொறுப்பேற்கிறாய்
கண்மணியல்லவா இவள்.............!

உன் காதலால் அடர்ந்த
என் உள்ளப் புதர்களில்
எதற்காய் கனவுகள் ஒளிக்கிறாய் ??
நீரின் அடர்த்தி ஒப்பீட்டினும் – உன்
அரவணைப்பே விகித முன்னிலை........!

நான்கு வயதுச் சிறுவனாய்
பால்வடியும் முகமாய்
கலக்கங்கள் கலைந்தோட
கொஞ்சிக் கனிவாய்
கண்துஞ்சிச் சிறைசெய்வேன்.........!

எதுவரை என
எண்ணித் தீரும் கர்மயோகம்
இதிலோ
காணக்கிடைக்கா காட்சிகளில்
நோக்கு வர்மம் பயில்கிறாய்........!

ஒளியும் ஒலியும்
என்செய்யும் என்னை
ஒழியும் உன் ஸ்பரிசங்கள்
குழையக் காய்கிறேன்
நிலவிடம் கேள்.........!

இக்கணமும்
உன்னுள் கலவாத
நாணச் சிணுங்கல்கள்
உன் சுவாசம் தீண்ட அவிழும்
மயங்கும் மொட்டுக்களாகும்......!

புரியாமல் உருளும்
இமைகளின் வலியுனக்கு
சுயலாபம் எனில்
காதலைப் பிரித்தெடுத்து
மாரணைத்துச் சுமந்து பார்............!

எழுதியவர் : புலமி (24-Aug-13, 8:20 pm)
பார்வை : 139

சிறந்த கவிதைகள்

மேலே