தீர்க்க சுமங்கலி

இராமயணத்து சீதையே
நீ நலமா ........?
மனித குலம் உன்னை
நலம் விசாரிப்பது கண்டு
மனமகிழ்ந்து போனாயோ ?
உன்னிடம் சில கேள்விகள்
பதிலை உன் மனதிற்குள் மட்டுமாவது
சொல்லி பார்த்துக்கொள் !

கணவனின் சொல்லை
கேட்காதவள் நீ !
இராமன் வர வேண்டாம்
என்று சொல்லியும்
வனவாசத்துக்கு ஏன் புறப்பட்டாய்?
இலக்குவனும் சேர்ந்து வந்ததை
தடுக்காத நீ ,
அவன் மனைவி ஊர்மிளையை
அழைக்காதது ஏன் ?
கணவனோடு நீ மட்டும்
வாழ்ந்தால் போதும்
என்று நினைத்த சுயநலவாதியா நீ?
பிழைக்க போன இடத்தில்
மான் பிடிக்க என்ன அவசியம்?
இலக்குவன் கீறிய கோட்டை
தாண்டியது நீ தானே !
இத்தனையும் செய்து விட்டு
இலங்காபுரிப் பெண்களுக்கு
வெள்ளைச் சேலையை
ஏன் கொடுத்தாய் ........?

நீ மூட்டி விட்ட யுத்தத்தில்
பலியாகிப்போன படைவீரர்களின்
மனைவிமார் வாங்கிய
சேலையின் நிறம்தான் வெள்ளை.

பிரிவினில் சுடுமோ காடு என்று
உன் மன்னவனிடம்
தத்துவம் சொல்லியவள் நீ!
இந்தப் பெண்களை
பிரிவு சுட்டு விட்ட உண்மை
உன் மனதை சுடவில்லையா?

நீ தீர்க்க சுமங்கலி
மங்கையர்க்கு
குங்குமம் கொடுப்பவள்
ஆனால் நம் மங்கையரின்
மங்களத்திலகம்
அழித்த கதை யாரறிவார்.......?

எழுதியவர் : உமா சிவா (11-Sep-13, 5:37 pm)
பார்வை : 194

மேலே