வாழச் செய்வாய்

நீளப்பரந்த வானத்தின்
. நிர்மலதோற்றத் தொலைவூடே
தாழக்கிடந்த வெண்மேகம்
. தேகம் சுட்டுச் சிவந்ததனால்
வீழக் கிடந்த வெய்யோனின்
. வெம்மை தங்கா கன்றியழ
மேளத் திடுதிடு சத்தமுடன்
. மேகத்திடி மின் னல்கூட்டம்

ஆளப் பிடித்த அரசனவன்
. அயல்நாட் டுள்ளே விதிமீறும்
வேழப்படையின் விரையோசை
. விதமென்றாகி மதங்கொள்ள
மீளப் பிறிதோர் நாள்வருவேன்
. மின்னல் மாயம் பொழிமழையாய்
வீழ்த்தான்நீ வெகுண்டாயோ
. விடியும்காணென் றொளிர்தீயும்

ஆழக் கடலில் அடிவீழ்ந்தே
. அனலைத் தீய்க்கும் அறங்கண்டே
மாளச் செய்வதில் முனைவாக
. மாலை யிருளன் போதையிடு
சூழச் செறிந்த விதங்கண்டு
. சுற்றிச் சுழன்றே புவியோட
நாளப்போதில் நிலைநோக்கி
. நடைகொள் மாந்தர் மனையேக

நாளும் பறந்தே இரைதேடி
. நன்றாயுண்ட பறவையினம்
கீழும் மேலும் திசைகண்டு
. கிளர்ந்து விரைந்து மேகுங்கால்
கோளும் செழித்த தீயுலவிக்
. கூத்தா டும்விண் ணாழத்தில்
வாழுமுலகில் வாழாது
. வதைபட்டுழலென் றாக்கியவள்

ஆழும் முறைமை சீர்கெட்டே
. அநியாயத்தில் வீழ்ந்தோரின்
தாழும் வாழ்விற் கைதந்தே
. தருமம் என்றே நிலைகொள்ளா
கூழுங்குடித்துத் திண்ணையிலோ
. கூடிவீரர் கதைபேசி
வாழத் தந்தாய் வாழ்வென்றே
. வாசல் புகுந்த வேளையிலே

நீளப் பெருத்த பாம்புகளும்
. நீள்கூர் கொள்ளும் கொம்புடனே
காளைப் பெருமா டோடிவரக்
. காலைச் சுற்றும் கருநாகம்
தேளின் கொடுவால் தீண்டிவிட
. தீயில் உயிரோ டெரிபோகும்
ஆளைக் கொல்லும் உயிர்வாங்கி
. அனைத்து மொன்றாய் அணிசேரின்

பேழைகுள்ளே பிணமாகிப்
. போதலன்றிப் பிறிதுண்டோ
தூளைத் தூசைத் துரும்பென்றும்
. தேவர்குலமாம் இவையாவும்
மூளைத்திறனில் மானிடமும்
. முழுதும் இயற்கை வளமாக்கி
ஏழை மனதோ டெம்தமிழர்
. இயல்பென் றிங்கே செய்தாய் ஏன்

பூவைப் பூக்கச் செய்தாய் பின்
. போதில் வாடும் தகையீந்தாய்
ஆவைக் கன்றென் றன்புடனே
. ஆக்கி யணைக்கு மன்பீந்தாய்
மாவைக் கனிகொள் மரமாக்கி
. மண்ணில் பசிபோம் வகைசெய்தும்
சேவைக்கென்றோ தமிழீந்தாய் l
. செல்லாக் காசாய் இருவென்றாய்

நாவிற் தேனாய் இசைபாட
. நல்லோர் தமிழைத் தந்தாலும்
பாவை இனமென் றோர்பாதி
. பட்டுத் துடியென்று டலீந்தாய்
சாவைத் தந்தேன் சதிபோலும்
. சரிதம் செய்தாய், மானிடனைத்
தேவைக் கென்றோ மானிடனே
. தீண்டிக்கொல்லும் குணமீந்தாய்

எழுதியவர் : கிரிகாசன் (11-Jan-14, 2:27 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 65

மேலே