அழிந்து போகா அஞ்சல் - அன்பை வளர்க்கும் நெஞ்சில்

கடிதம் என எனை வாங்கி
எண்ணம் எல்லாம் நீ எழுத - என்
உள்ளம் தந்தேன் உனக்காக - அதில்
உணர்வை கூட நான் தாங்க !!

நெஞ்சில் என்றும் நீ குத்தி
பூட்டி வைத்தாய் பத்திரமாய் !!
என்னவன் வந்து எடுத்து செல்ல
பறந்து செல்வோம் அவசரமாய் !!

பாதை எல்லாம் பரவசமாய்
அழைத்து கொடுப்பாய் அஞ்சலென !
பயணம் முடிந்தது பலவிதமாய் - என்
தோலை கிழித்தான் உன் அன்பன் !!

இதயம் படித்தான் என்னிடமே
அவ்வழகை மட்டும் ரசித்தேனே !
பதிலை பதிக்கவும் நான் தானே
பயணம் மீண்டும் தொடர்ந்தேனே !!..

குரலை கேட்க நீ நினைத்து
எங்கோ சென்றாய் எனை மறந்து !
கவனம் எல்லாம் சிதறுதடா
அன்பும் இங்கே குறையுதடா !!

மன அழுத்தம் மட்டும் அதிகமாய் !!
உன் குழந்தை கூட குழப்பத்தில் !
அமைதி எல்லாம் மாண்டு போய்
அலறல் என்றும் உறங்காமல் !!

நேரம் கொஞ்சம் நீ சேர்க்க
நோயை நோக்கி செல்லாதே !!
கழுத்தை அறுக்கும் கைபேசி
காரணம் பல நீ யோசி !!

உள்ளம் சுமந்து சென்றேனே !!
அன்பன் அன்பை நீ ரசிக்க !
நொடியில் சேதி நீ அனுப்ப
என்னிடமில்லை அவ்வேகம் !!

காலம் மாறி போனதடா - என்
உயிரும் அதிலே போகுதடா... !
அழிந்து போவது இவ்வுறவா ?
அன்பை சுமப்பது என் தவறா ?

கடிதம் எல்லாம் பொக்கிஷமாய்
நினைவில் வாழும் நிரந்தரமாய் !!
அழிந்து போகா அஞ்சல் - நம்
அன்பை வளர்க்கும் நெஞ்சில் !!

என்னிடம் பேச நீயில்லை
ஏளனம் செய்யா ஆளில்லை - நம்
மொழியும் வலியில் வாடுதடா
எழுத்தும் என்னுடன் அழியுதடா !!

உள்ளம் உருகும் உன்னிடம்
எடுத்து எழுது ஓர் கடிதம் !!
நானும் உயிர்ப்பேன் அந்நிமிடம்
மனிதம் வளரும் மறுநிமிடம் !!

===============================================
அன்பை உணர்த்தும்
அஞ்சல் அட்டைக்கு சமர்ப்பணம்
===============================================

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (22-Feb-14, 2:05 am)
பார்வை : 483

மேலே