வசீகரா

நான் என்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில்லை ஏனென்றால் எனக்கு கவிதை என்றால் என்னவென்றே தெரியாது. உணர்வுகளை எழுதிப் பார்க்கையில் அவற்றை உரைகல் வைத்து உராய்த்து பார்க்கும் புத்தியில்லாதவனாதலால் எனக்கு கவிதைகள் தூரமாகியிருக்கலாம்....!
கவிதைகள் என்று ஏதோ ஒன்றைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருப்பவர்களுக்கும் எனக்கும் காத தூரம். காதலை கவிதையில் சொல்ல இங்கே பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். விரக்தியை, காமத்தை நேசத்தை, வெற்றியை, தோல்வியை, உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் இன்னதென்று அறியாத உணர்வுகளை எழுதி எழுதி கவிதை என்று சொல்கிறார்கள்.
விபரமறியாச் சிறுவனைப் போல நானும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நகர்கிறேன். என் வலிகளை நான் எழுதுவதுண்டு. அவை கவிதைகளா என்ன என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் கவிதைகளுக்கும் சமகால எதார்த்தங்களுக்கும் யாதொரு தொடர்பும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். கவிதைகள் எப்போதும் நமக்குச் சிறகு கொடுத்து அவை பேசும் களத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். கற்பனையற்ற கவிதைகள் நிஜங்களை முகங்களாகக் கொண்டிருக்கையில் அங்கே லயித்துக் கிடக்க என்ன இருக்கிறது? காதலைக் கவிதையாக்க முனைதலும் அபத்தமே...காதலே கவிதை என்றாகி விட்டால் அதைப் பற்றி கவிதை என்ன எழுத வேண்டிக் கிடக்கிறது...?
காதல் தோல்விகளைப் பற்றி நான் எழுதுவதுண்டு. அப்படி எழுதும் போது காதல் ஒரு போதும் தோற்பதில்லை என்று சிலர் என்னிடம் வாதிடுவார்கள். காதல் ஒரு போதும் தோற்பதில்லைதான் என்றாலும் காதலர்கள் எல்லாம் அதைத் தோற்கடிக்கத்தானே பிறந்திருக்கிறார்கள் என்று நான் கடுப்பாய் திருப்பி அவர்களை வார்த்தைகளால் அடிப்பதுமுண்டு. இங்கே பெரும்பாலும் யாருக்கும் காதலைத் தெரியாது. காமத்தை உடம்பு முழுதும் சுமந்து கொண்டு காதல், காதல் என்று கரையும் காக்கைகள் தங்களைக் குயில்கள் என்றெண்ணிக் கொண்டு கரைந்து கொண்டே இருக்கின்றன. அந்த இடைவிடாத கரைதலை கவிதை என்று சொல்லி கடைவிரித்தும் கொள்கின்றன.
ஒரு பெண்ணோடு ஒருவன் காதல் கொண்டு அவன் அந்தக் காதலில் தோற்றுப் போகும் போது அதாவது அறிவு ஜீவிகளே அந்த பெண்ணோ அல்லது ஆணோ அந்தக் காதலை லெளகீகத்துக்குள் போட்டு அடைக்க முயன்று தோற்கும் போது காதல் அங்கே சீறிப்பாய்கிறது. தோல்வி என்று கருதிக் கொண்டு எழுதுகோல்கள் கக்கும் நெருப்பினில்தான் காதலிருக்கிறது. வெற்றி பெற்ற பின்பு ஒரு செயல் முடிந்து போகிறது.. அங்கே பேச ஒன்றுமே இல்லை. காதலித்து கைப்பிடித்துக் கொண்டவர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்கள் காதலின் வெற்றி என்று கருதிக் கொள்கிறார்கள். கவிதை எழுதும் பெரும்பாலானோர் பெரும் காதலை மையமாய் வைத்து எழுதுவது சரிதான்.. ஆனால், காதலை எழுத ஒரு பெண்ணோ ஆணோ தேவையில்லை என்று உணரும் போது நிஜத்தில் ஒரு எதார்த்தமான எழுத்து தன்னை வேறு பரிமாணத்திற்குள் பிரசவித்துக் கொள்கிறது.
எனக்கு லெளகீகக் காதல் போரடித்துப் போய்விட்டது. அதனால் லெளகீகமாய் எழுதும் காதல் தோல் போர்த்திய காமக் கவிதைகளை வாசித்து வாசித்து எனக்கு எரிச்சல் வருகிறது. பெண்ணை மட்டும் நேசிக்கும் ஒரு வட்டம் எப்போது எனக்குள் அழிந்து போனது அல்லது அந்த முனைப்பு எப்போது பட்டுப்போனது என்று எனக்குத் தெரியாது. கிறுக்கிக் கொண்டே மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்த போது எந்தக் கணத்தில் வெளியே பெய்த மழை எனக்குள் பெய்யத் தொடங்கியது என்பதும் எனக்குத் தெரியாது.
கிளியோபட்ராக்களின்
அழகிலிருந்து பிறந்த
கவிதைகளை எல்லாம்
நான் ஒரு பாலித்தின் கவரில்
பிடித்து அடைத்து விட்டேன்...
ஆமாம்...
அவை ஒரு நாகத்தின்
வசீகரத்தையும்...அபாயத்தையும்
ஒருங்கே கொண்டவை...!
பெண்ணை வர்ணித்து எழுதுகையில்
என் காகிதங்களில்
எப்போதும் நெளியும் விசமுள்ள
பாம்புகளை எப்போதும் இப்படி நான்
பிடித்துக் கொண்டு போய்
என் நினைவெட்டா தூரத்தில் விட்டுவிடுவதுண்டு...;
இப்போதெல்லாம்...
பெண்களைப் பற்றி கவிதை எழுதுவதை
நான் விட்டு விட்டேன்....
கொடிய விசமுள்ள நாகங்களைப் பற்றியொரு நாள்
எழுதிக் கொண்டிருந்த போது
என் காகிதங்களில் நிர்வாணமாய் பல
பெண்கள் நெளிந்து கொண்டிருந்தார்கள்...
ஒரு பெண்ணொருத்தி என்
காதுகளில் வந்து காமரசம் ஊற்றினாள்...
இன்னொருத்தி என் உதட்டில்
அமர்ந்து கொண்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்...
எழுத எழுத காகிதத்திலிருந்து
ஜனித்துக் கொண்டே இருந்த பெண்கள்...
என் உடல் முழுதும் ஊரத் தொடங்கினர்....
நான் கண் மூடிக் கொண்டேன்....
என் கவிதை நின்று போனது....!
மீண்டுமொரு முறை வென்று விட்டதற்காய்
சாத்தானுக்கு முடிசூட்டினான் கடவுள்...
ஆதாம் மட்டும் அம்மணம் உணர்ந்தான்....
ஏவாள் சாத்தானோடு சென்று விட்டாள்...!
கவிதைகள் எல்லாம் மாயைகள்....! லெளகீகக் காதல்கள் எல்லாம் பெத்தடினாய் ஸிரிஞ்சினை ஆக்கிரமித்துக் கொண்டு உடலுக்குள் காமமாய் பற்றி பரவுகின்றன. உலகெங்கும் கேட்கிறது சிசுக்களின் அழுகுரல்கள். யோனி கடந்து அவை பூமி தொடும் போது எல்லாம் எனக்கு அது காதலின் அழுகுரலாய்த்தான் கேட்கிறது. அழுகுரலை கூர்மையாய் உற்று நோக்கி அதனைப் பிடித்து பின் தொடர்ந்து காற்றில் மிதந்து சென்றால் மீண்டுமொரு கூட்டத்தின் அழுகுரல் இன்னும் சப்தமாய் கேட்கிறது. ஆமாம்...இந்த முறை அது சிசுவின் ஒற்றை அழுகையில்லை. தடித்த பலரின் அழுகை அது. முற்றிப் போன சிசு மரக்கட்டையில் வைக்கப்பட்டு அதன் மீது சாணம் அடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெருப்பு சட்டென்று உடலைப் பற்றிக் கொள்ளும் அந்தப் பொழுதில் கூட்டம் கதறி அழுகிறது.
எனக்கு சிரிப்பு வருகிறது.
ஜனித்தலுக்காய் நிகழும் காமம் காதலெனில்...அந்தக் காமத்தினால் நிகழும் ஜனனம் காதலெனில்.....மரணம் மட்டும் எப்படியடா மடையர்களா துக்கமாகும்? இன்னும் சொல்லப் போனால் மரணம் தான் பெருங்காதல். அது பெருங்கூடல். உடல்களைப் புணர்ந்து புணர்ந்து ஓய்ந்து போன பிண்டம் பிரபஞ்சத்தைப் புணரும் ஒரு பெருங்காமம். மரணம் நிகழும் நொடி காமத்தினால் வரையறுக்க முடியாத உச்சம். கூடலின் உச்சத்தில் துடி துடித்து அயர்ந்து மீண்டும் உடலுக்குள் அடைபட்டுக் கொள்ளும் நிகழ்வல்ல இது. புரிதலோடு நிகழும் மரணம் தீராக்காதல், தீராக்காமம் இன்னும் சொல்லப்போனால் அதுதான் நிஜக்கவிதை.
என் கவிதை என் மரணத்தின் போதுதான் அரங்கேற்றமாகும். நானே இயற்றி, நானே வாசித்து நானே கைதட்டி ஆர்ப்பரித்து, நானே என்னை வாழ்த்தி நகரும் பேரின்பம் அது. ஜதி சொல்லி நானே ஆடிக் களிக்கும் இனிய பரதமது. இங்கே காகிதத்தில் எல்லோரும் கிறுக்கிக் கொண்டிருப்பது மனிதக் கழிவுகளைத்தான். அவை ஒரு போதும் கவிதைகளாகாது. கவிதைகள் பொருள் கொள்ள முடியாதவை. பெரும் இருட்டு அவை. அடர் கானகம். சுடும் நெருப்பு. அங்கே ரசிக்கவும் விவரிக்கவும் ஒன்றுமில்லாத சுத்த சூன்யமது. அதன் சாயலில் இங்கே ஏதேனும் ஒன்றை ஓரிருவர் எதேச்சையாகப் படைத்து விடுகிறார்கள். கவிதை என்பது தெளிவு அல்ல. தெளிவு என்பது உயர்வும் அல்ல. கவிதை குழப்பம். குழப்பம் ஆனந்தம். தெளிவாய் இருப்பவனுக்கு அடுத்த கணம் பிடிபடும். சுற்றி இருக்கும் சூழல் விளங்கும். புரிதல் என்னும் சிக்கலுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு அவன் சுயத்தை தொலைத்து விடுகிறான்.
சுயம் தெளிவற்றது. இன்னதுதான் செய்யப்போகிறோம் என்ற விபரம் அறியாதது. எதிர்பாராமல் நிகழும் யாவற்றையும் சுகித்து சுகித்து ஆர்ப்பரித்து நகரும் ஒரு காட்டாறு அது. அதற்கு காதலும் தேவையில்லை, காதலியும் தேவையில்லை, கடவுளும் தேவையில்லை. அது நிற்கும். நடக்கும். நடனமாடும். ஒன்றுமில்லை என்று சொல்லி மூலையில் முடங்கிக் கிடக்கும். அது படைக்கும். அது அழிக்கும். அது பார்க்கும். அது தோற்கும். அது வெல்லும். அது கசக்கும். அது இனிக்கும். அது புளிக்கும். அது துவர்க்கும். அது கரிக்கும். அது பாலையாகும். அதுவே வெள்ளக்காடாகும். மழை வேண்டும் என்று அழும். மழை வேண்டாம் என்றும் அழும். காதல் பொய்யென்று சொல்லும் .காதல் மெய்யென்றும் சொல்லும். மனிதர் பால் இச்சை தீர்த்துக் கொள்ள ஒப்பனைகள் செய்து கொண்டு பொது விதிகளை மீசையாக்கி முறுக்கிக் கொண்டே நல்லவன் கபடநாடகம் ஆடும். புணர்ச்சி முடிந்து தொய்ந்து கிடக்கும் மனிதராய் பிரஞ்ஞையற்று அது உறங்கும். பிரஞ்ஞையோடு பிரபஞ்சத்தை சுற்றி வரும். அது கொலை செய்யும். அதுவே பாதுகாக்கும்.
ஆமாம் சுயம் அப்படித்தான். நேரே சென்று மேலெழும்பி கீழே விழுந்து இடம் திரும்பி பின் வலம் மாறி ஏதோ ஒரு கணத்தில் வற்றிப்போய் செத்தும் போகும். அது வரையறுக்கப்படாதது. ஒரு படைப்பாளி சுயத்தோடு எப்போதுமிருக்கிறான். தன்னை எந்த ஒரு நிகழ்வோடும் அவன் முடிச்சிட்டுக் கொள்வதில்லை. யாருடனும் சேர்ந்து அவனால் இயங்கவே முடிவதில்லை. கண நேரம் இனிப்பு நல்லது என்பான் அடுத்த கணத்தில் கசப்பே சிறந்தது என்பான். எதுவுமே உறுதியில்லாத தன்மைதான் எதார்த்தம் அதுவே ஒரு படைப்பாளியின் அடையாளம்.
இப்போது சொல்லுங்கள் எதற்குள்ளோ என்னைப் போட்டு அடைத்துக் கொண்டு ஊறுகாயாய் நான் கிடக்க....? வருவோரும் போவோரும் கை விட்டு நக்கிப் பார்த்து என்னை கணித்து விட்டால்....எனக்கென்ன தனித்தன்மை இருக்கமுடியும்?
இரண்டு நாட்கள் முன்பு நானொரு குளக்கரையில் அமர்ந்திருந்தேன்....வற்றிப் போயிருந்த அந்த குளத்தில் பிளந்து கிடந்த நிலத்தின் இடைவெளிகளுக்குள் ஆங்காங்கே செத்துக் கிடந்த நிலவொளியை அந்த பிளவுகளுக்குள் இறங்கிப் போய் பார்க்க நினைத்திருந்தேன். நிலத்தில் விழுந்த நிலவொளியை எப்படிக் கொன்றாய் பிளந்து கிடக்கும் நிலமே என்று கேட்க நினைத்திருந்தேன். என் எழுத்துக்களும் இப்படித்தான் சில நேரம் என் முகடுகளில் ஏறி அவை கர்ஜிக்கும் பல நேரம் என் விரிசல்களுக்குள் விழுந்து கனவுகளுக்குள் முழுத்தெம்பாய் நீச்சலடிக்க முடியாமல் எனக்குள்ளேயே செத்தும் போகும்...!
என் காகிதங்களில் என்றாவது ஒரு நாள் பூ பூத்துவிடாதா என்றெண்ணிதான் எப்போதும் எழுதத் தொடங்குகிறேன்...! பல நாட்கள் கெட்டியான இருளின் அழுத்தமான தனிமையிலிருந்து அவை ஒரு கூட்டுப் புழு தன் கூடுடைத்து வெளிவரும் அவஸ்தையோடு சிறகசைத்து சிறகசைத்து வருவதுமுண்டு... இப்போது எழுதி முடித்த இந்த கோட்பாடுகளற்ற இந்த கட்டுரையைப் போல....
அர்த்தம் தேடி கட்டுரைகளையும் கவிதைகளையும் கதைகளையும் வாசிப்பவர்கள் தோற்றுப் போகிறார்கள்... ஆமாம்... அர்த்தமில்லாத வாழ்க்கைக்குள் அர்த்தத்தை தேடுவது அபத்தம் தானே...?!!!!! வசீகரங்கள் எல்லாம் அர்த்தம் இல்லாதது. இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியாதது. விளங்கி கொள்ள முடியாத விசயங்கள்தான் எப்போதும் ஆச்சர்யமானவை.
தேவா சுப்பையா...