சிரித்து சிரித்து என்னை - குமரி

எங்கே சென்றாய் நீ - என்னை
ஏங்க விட்டு எங்கே சென்றாய் நீ..?
எங்கோ பறந்து விட்டாய் நீ - என்னை
ஏங்க வைத்து மறைந்து விட்டாய்..!
இதழ் விரித்து மலராக சிரித்தாய் – நீ
இதயத்தில் தேன் கொண்டு நிறைத்தாய்.!
உன் விழிபார்வை அம்பாலே இழுத்தாய்
என் விழிதேடும் நிழலாகி குதித்தாய்..!
உன் சிரிப்பு கண்டு இமயத்தில் பறந்தேன்
உன் குழிவு கண்டு இதயத்தை மறந்தேன்..!
உன் நாணத்தில் நானென்னை இழந்தேன்
உன் குரலாலே மீண்டும் நான் பிறந்தேன்..!
நினைவாலே என் உதிரமும் தேட்டம்
நிழல் காண அது வேகமாய் ஓட்டம்.!
காலோசை செவி கேட்க நோட்டம்
கண்டாலோ என்னிதயம் மலர் தோட்டம்..!
எண்ணத்தில் நீந்துகிறேன் உனை மனதில்
வண்ணத்தில் வருவாயோ என் கனவில்..!
சிறைபட்ட என் காதலை நீ கேளு
சிரிக்காமல் ஒரு பதிலை நீ கூறு..!
பித்தனாய் பிறக்க வில்லை பெண்ணே
புத்தனாய் மாற்றி விடாதே கண்ணே..!
சித்தனாய் வலம் வரும் முன்னே
சுத்தனாய் என்கை பிடிப்பாய் பொன்னே..!