இதயவிதை
"கவிதைக்குப் பொய் அழகு"
எழுதிய கவிஞன்
எப்படி மறந்தானோ
தெரியவில்லை...
"பாடும் பொருளே
நட்பென்றானால்
பொய்புரல் கவியும்
மெய்யுடை தரிக்கும்" என்பதை ...
கல்லூரித்தாயின்
கருவறையில் கால்வைத்த
மழலை மனிதனே
அறிவியல் பிரசவத்தின்
விதிவிலக்காய்ப் போகிறான்...
அண்டத்தின் ஆருடம்
அக்கக்காய் குறிக்கும்
"கௌரி பஞ்சாங்கமும்"
நவில்சார் நட்பின்
நாட்கள்முன் பலிப்பதில்லை...
தலைகளும்,கால்களும்
பிரித்தறியா தழுவலில்
சொக்கித் தூங்கிய
நட்புக் கட்டில் முன்
சொர்க்கமும் தான் சோரம் போனது...
மதி மழுங்கி,
மார் கலங்கி,
மனம் நொடிந்து
போன போதெல்லாம்
"மாமனும்", "மச்சானுமே"
கீதையும்,குரானும்,பைபிளும் ஆகின ...
பல கை
பிடுங்கித் தின்ற
ஒற்றை எள்ளுருண்டையின்
கொள்ளைருசி
அமுதுண்ட தேவர்களின்
நாக்களுக்கும் கிட்டவில்லை....
'குச்சி' , 'போதி' , 'லச்சு' என்று
தமிழகராதி பார்த்திராத
பதங்களின் புனைவால்
இயற்பெயர்களும் இறைவனடி சேர்ந்தன...
நட்பா?காதலா?
என்ற மரபேறிய கேள்விக்கு
'காதலே' என்று
உதட்டளவில் பேசிய
வாய்கள் பலவும்
கல்லூரிக் கடைநாள்
கண்ணீர் அடிக்கும்
"நட்பே!" என்ற முரசொலியில்
மௌனித்து தான் போகின்றன...
நண்பா! காலங்கள் பல கறைந்து
உயிர் கவரும் தருவாயில்
காலனுக்குக் கட்டளைஇடு
"என் இதயம் கொணர்" என்று..
பாவம்!கல்லூரிகளின் விலாசம்
அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை ..