“டூரிஸ்ட் ஸ்பாட்”

“டூரிஸ்ட் ஸ்பாட்”

கார்த்திகேயன் இங்கு வந்து நீண்ட நாள் ஆகி விட்டது இந்த இடத்துக்கு வந்து, கிட்டதட்ட நான்கு அல்லது ஐந்து வருடங்கள் இருக்குமா? இருக்கலாம். அதற்குள் இந்த இடம் நன்றாக புகழ் பெற்று விட்டது, கண் கூடாக தெரிகிறது. இவன் காரை விட்டு இறங்கும் இடத்தில் கிட்டத்தட்ட பத்து பனிரெண்டு சுற்றுலா பேருந்துகள் நின்று கொண்டிருந்தன.
ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் சென்று கொண்டே இருக்கிறார்கள். “அரை பர்லாங்” முன்னாலேயே பேருந்துகளை நிறுத்தி விடுகிறார்கள். அங்கிருந்து இறங்கி நடக்க சொல்கிறார்கள். நடக்க முடியாதவர்களுக்கு அவர்களை உட்காரவைத்து உருட்டி கொண்டு போக இரண்டு மூன்று வீல் சேர்கள் அங்கேயே இருக்கிறது. அதற்கு தனி கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதற்காக தனியே வீல்சேர்களை வரிசையாக வைத்து மேலேயே கட்டண விவரங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.
அடேயப்பா… நவ நாகரிகமாகத்தான் ஆகி விட்டது இந்த இடம். இப்படி கூட்டமாக இங்கு வந்து அப்படி என்னதான் பார்க்கிறார்கள்?
இரண்டு மலை குன்றுகள், அவைகள் ஒன்றை ஒன்று அணைத்தது போல் நெருங்கி நின்றாலும் அவை மேலே செல்ல செல்ல ஒட்டி செல்வதை போல இணைந்திருக்கும். ஆனால் அடிப்புறம் விலகியே இருக்கும்.அது கீழ் மட்டம் வரைக்கும் இணையாமல் இருக்கும்.
இரண்டுக்கும் இடையில் ஒரு ஊற்று கிளம்பி கீழ் நோக்கி பாயும். அது பார்ப்பதற்கு ஒரு நீர் வீழ்ச்சி மாதிரி இருந்தாலும் பெருமளவு தண்ணீர் இருக்காது.
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நான்கைந்து கிலோ மீட்டர் சென்றால் இந்த இடத்தை அடையலாம்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து மலையின் ஊற்று இருக்கும் இடம் வரைக்கும் நடந்து செல்ல வசதி செய்திருக்கிறார்கள். அங்கிருந்து வளைந்து வளைந்து கீழே வரைக்கும் சமதளம் வரைக்கும் சிமிண்ட் பாதையும் போடப்பட்டு படிக்கட்டில் செல்பவர்களுக்கும் தனியாக படிக்கட்டு வசதியும் செய்து வைத்திருக்கிறார்கள்
சுற்றுலா வந்தவர்களுக்கு இதில் ஒரு திருப்தி கிடைத்து விடுகிறது, கீழே வரைக்கும் சுற்றி சுற்றி வந்து அடியில் விழும் நீர் வீழ்ச்சியை பார்த்து விட்டு மறுபடி மேலே செல்வது.
காரை நிறுத்தி சுற்று முற்றும் பார்த்தான், அடேயப்பா இரண்டு மூன்று ஓட்டல்கள் வந்திருந்தன, அதுவும் தங்கும் வசதியுடன் இருப்பதாக விளம்பரத்துடன். வரிசையாக ஏராளமான கடைகள்.
அத்தனையும் தாண்டி சற்று தொலைவில் நவ நாகரிகமாக நட்சத்திர அந்தஸ்தில் உயரமான ஒரு ஹோட்டல் இருப்பதை பார்த்தான். பகலில் கூட நன்கு படிக்கும் வண்ணம் “மகேஸ் மகேஸ்” என்று பெரும் எழுத்தில் தெரிந்தது. அதை சுற்றி இருந்த மின்விளக்கு வரிசையை பார்த்தவன் இரவில் அது “ஒளிரும் வண்ணம்” இருக்கலாம் என்று ஊகித்தான்.
அங்கு போகலாமா? ஒரு கணம் யோசித்தவன் வேண்டாம், அங்கு மகேஷ் இருக்கிறானோ இல்லையோ? மெல்ல நடக்க ஆரம்பித்தான் ஊற்றை நோக்கி. அவன் சிந்தனை மட்டும் பின்னோக்கி செல்ல ஆரம்பித்திருந்தது.
கார்த்திகேயன் அருகில் உட்கார்ந்திருந்தவனை பார்த்தான். வியர்த்திருந்தான், அந்த ஏசி குளிரையும் மீறி. கை நடுக்கம் தெரிந்தது. கிராமத்திலிருந்து வந்திருப்பவன் போலத்தான் இருந்தான்.
அவனுக்கு ஏதாவது ஆறுதல் சொல்லவேண்டும் என்று நினைத்தான். ‘ஹலோ பிரதர்’ அழைத்தான். ஒரு நிமிடம் இவன் கூப்பிட்டது கேட்காதவன் போல் உட்கார்ந்திருந்தவன் சட்டென விழித்தவன் போல் திரும்பி என்னியா?
சந்தேகமே இல்லாமல் புரிந்து கொண்டான், பையன் இது போன்ற நேர்காணலுக்கு புதியவன்.
ரொம்ப பதட்டமா இருக்கறமாதிரி இருக்கு, வாங்களேன் போய் காப்பி சாப்பிட்டுட்டு வந்துடலாம்.
ம்..ம்..தலையை ஆட்டியவன் திடீரென கூப்புட்டுட்டாங்கன்னா?
சிரித்தான், பிரதர் மணி எவ்வளவு பாருங்க? ஒன்பதுதான் ஆச்சு, அவங்க இண்டர்வியூ பத்து மணிக்குத்தான் சொல்லியிருக்காங்க, நாம நேரத்துலயே வந்துட்டோம்.
திருப்தியாய் தலையசைத்தவன் கொஞ்சம் சிரித்தான்.
அப்பாடி பையன் கொஞ்சம் சரியாகி விட்டான்.
அரை மணி நேர பழக்கத்தில் “டீயும் இரண்டு வடையும்” சாப்பிட்டு முடிக்கும் முன் அவன் பெயர் மகேசிலிருந்து ஆரம்பித்து அவன் ஊர், வறுமை, மழையில்லாமல் விவசாயம் செய்ய முடியாத கொடுமை, கடைசியில் இளங்கலை தமிழ் படித்திருந்ததால் இந்த பத்திரிக்கைக்கு விண்ணப்பித்து வந்திருக்கிறான்.
கார்த்திகேயனுக்கு சந்தேகம் வந்தது, இவனை எடுப்பார்களா? அதை கேட்கவும் செய்தான் அவன் மணம் புண்படாதவாறு, எப்படீங்க பாஸ் இவங்களை நம்புறது, நமக்கு வேலை கொடுப்பாங்கன்னு?
அவன் வெள்ளெந்தியாய் சொன்னான், எங்க ஊர் எம்.எல்.வோட அண்ணன் தான் இந்த பத்திரிக்கைக்கு முதலாளி, எம்.எல்.ஏ ஏற்கனவே பேசிட்டுத்தான் என்னை அனுப்பிச்சாரு.
அடேயப்பா, பெரிய சிபாரிசுதான், மனதிற்குள் நினைத்து கொண்டான்.
இவர்கள் மீண்டும் வந்த பொழுது புதிதாக இரண்டு பேர் மட்டும் வந்திருந்தனர். அவர்கள் பெண்களாக இருந்தனர். அப்படியானால், தேவைப்படுபவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டான்.
இவர்களை பேட்டி கண்டவர் தமிழாய் இருந்தாலும் பெங்களூர்வாசியாக இருந்ததால் பாதி கன்னடமும் தமிழும் கலந்தே பேசினார். இவனுக்கு ஏற்கனவே பத்திரிக்கை உலகில் சென்னையில் குப்பை கொட்டியிருந்ததால் மறு பேச்சின்றி எடுத்து கொள்வதாக சொல்லி விட்டார். அதே நேரம் முதலில் அதிக அளவு ஊதியம் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் சொல்லி விட்டார்.
‘மகேசை’ உன் பொறுப்புல வச்சுக்க, அவனுக்கு எல்லா வேலையும் கத்து கொடுத்துடு, மற்றும் வந்திருந்த இரண்டு பெண்களை அலுவலக பொறுப்புக்கு வைத்துக்கொள் என்று சொல்லி விட்டார்.
கார்த்திகேயனுக்கு இந்த பத்திரிக்கை உலகம் நன்கு அறிமுகமானதாய் இருந்தாலும், ‘பெங்களூருவில்’ ஒரு தமிழ் பத்திரிக்கையை தொடங்கி அதை வியாபார நோக்கில் லாபத்தை சம்பாதித்து கொடுக்கவேண்டும் என்பது பெரும் சவாலாகவே இருந்தது.
ஆறு மாதங்களில் பத்திரிக்கையை ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருந்தான். என்னதான் பத்திரிக்கை நடத்துவது முதலாளிக்கு ஒரு கெளரவ தொழிலாக இருந்தாலும் அதில் லாபம் இருப்பதுதான் நல்லது என்று அவர் நினைப்பதும் இவனுக்கு புரிந்தது.
மகேஸ் கார்த்தியுடன் ஒட்டி கொண்டாலும், அவன் ஏதோ ஒரு நோக்கில் இருப்பதாகவே இவனுக்கு பட்டது. ஆனால் அது என்னவென்று புரிந்து கொள்வதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது.
அன்று இருவரும் பத்திரிக்கைக்கு ஏதாவது புதிதாக செய்யவேண்டும் என்று மாலை நேரத்தில் ஒரு காண்டீனில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுதுதான் இந்த பேச்சை ஆரம்பித்தான்.
சார் நாம புதுசு புதுசா “டூரிஸ்ட் பிளேசை” கண்டு பிடிச்சு அதை பத்தி விவரமா எழுதி மக்கள்கிட்ட கொண்டு போகணும் சார் என்றான்.
கார்த்திக்குக்கும் இது நல்ல யோசனையாகவே பட்டது, என்றாலும் முதல்ல சுத்து வட்டாரத்துல இருக்கற “டூரிஸ்ட் பிளேஸ்” லிஸ்ட் தயார் பண்ணு, அப்புறம் ஒவ்வொண்ணை பத்தி டீடெயில் கலெக்ட் பண்ணி நாம விசிட் போற மாதிரியும் அதை பத்தி விவரமாக சொல்ற மாதிரியும் ஒரு கட்டுரை மாசம் ஒண்ணுன்னு தயார் பண்ணலாம்.
அவன் முகம் பளிச்சிட்டால்லும் சார் நான் ஒண்ணு சொல்வேன் கோபிச்சுக்க கூடாது, இழுத்தான்.
சொல்லுப்பா,
முதல்ல எங்க ஊரு பக்கத்துல ஒரு இடம் இருக்கு சார்.
வியப்புடன் அது டூரிஸ்ட் ஸ்பாட்டா..?
முகம் தொங்கி போய் இல்ல சார்,. மீண்டும் இழுத்தான்.
என்னப்பா நீ ‘டூரிஸ் ஸ்பாட்’ இல்லாம அப்புறம் எப்படி?
அவன் முகம் தீவிரமாகியது, சார் அதை பத்தி கேப்பீங்கன்னுதான் காத்துக்கிட்டிருக்கேன் சார், ஆரம்பித்தான். அவர்கள் ஊரில் மழை இல்லாததால் விவசாயம் பொய்த்து போவதும், ஒரே ஒரு சிறு ஊற்றில் எப்பொழுதும் இருக்கும் தண்ணீரை வைத்து அவர்கள் குடிநீராக உபயோகிப்பதையும் சொன்னான்.
சார் ‘சுத்து வட்டாரத்துல’ எந்த தொழிலும் பண்ண முடியாது சார், என்னால ஏதாவது எங்க ஊருக்கு செய்யறதா இருந்தா ஒரே ஒரு வழி இருக்கு சார், எங்க ஊர்ல இருக்கற பார்க்கற இடம் அப்படீன்னா இரண்டு ‘மலைங்க’ தான் சார், அதுவும் அடியில் ஒட்டாம மேல இரண்டும் ஒட்டி இருக்கும் சார். இதை வச்சு ஏதாச்சும் செய்யணும் சார்.
முதலில் அந்த மலையை புகைப்படம் எடுத்து முதல் மாதம் அட்டைப்படமாக போட்டோம், அடுத்து அதன் சிறப்பை அடுத்தமாதம் எழுதினோம். எல்லாம் ‘மகேஸ்’ கற்பனையில் சொன்னானோ, நிசமாக சொன்னானோ அதை பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டோம்.
அடுத்து நாங்களே அதை ‘டூரிஸ்ட் இடமாக’ உருவாக சிறந்த இடம் என்று எழுதினோம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அதன் மதிப்பை கூட்டி காண்பிக்கும் வண்ணம் எங்கள் பத்திரிக்கை வாசகர்களிடம் சென்றது. அது மட்டுமல்ல பல கன்னட பத்திரிக்கையிலும் அதை பற்றி செய்திகள் வெளி வர செய்தோம்.
மூன்றே வருடங்களில் அந்த இடம் பிரபலமாக ஆரம்பித்தது. அதன் பின் மள மளவென நிலங்களின் மதிப்பு உயர்ந்தது. மகேசுக்கு பக்கத்தில் விளை நிலங்கள் நிறைய இருந்தன.
திடீரென ஒரு நாள் அவனது ராஜினாமா கடிதத்தை நீட்டினான். படித்து பார்த்து திகைப்பாய் நிமிர்ந்தவனிடம் சார் ‘பாங்குல லோன்’ போட்டு எங்க இடத்துல ஒரு ஓட்டல் கட்ட போறேன் சார்.
ஓட்டல் கட்டுனா அங்க வியாபாரம் ஆகுமா? வியப்பாய் கேட்ட கார்த்தியிடம் சார் அங்க ஏற்கனவே இரண்டு ஓட்டல் கட்டி இரண்டுக்கும் நல்ல கூட்டம் வருது சார், நான் மட்டும் ஏன் சார் இடத்தை சும்மா வச்சிருக்கணும். நான் இல்லாட்டி இன்னொருத்தன் என் நிலத்தை விலைக்கு கொடுன்னு நிக்கறான்.
அதுவும் சரிதான், தலையாட்டினான் கார்த்தி.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு பதட்டமாய், கிராமத்தானாய் இருந்த மகேஸ் இன்றைக்கு அவன் ஓட்டலில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து கொண்டிருக்கிறானோ?
சட்டென நினைவு கலைய ‘ஊற்றின்’ அருகில் நின்றிருந்தான் கார்த்தி. கொஞ்சம் இருள் சூழ்ந்திருந்ததால் ஊற்றை சுற்றி விளக்கு வெளிச்சம் ஜொலித்தது. அதை விட கீழ் பாதை முழுக்க விளக்கு வெளிச்சங்கள் பளீரிட்டன.
இரவு பகலில் வந்ததை விட கூட்டம் அதிகமாக வருமாம். அப்புறம் தங்கும் ஓட்டல்கள் நிறைய உருவாகாமல் என்ன செய்யும்? இரவு காட்சிக்காகவே மக்கள் இங்கு வருவார்களே..1
கார்த்தி மகேசை பார்க்க போகவில்லை, பெங்களூருக்கு கிளம்பி இருந்தான். இப்பொழுது கிளம்பினால்தான் இரவு பத்து மணிக்குள் போய் சேர முடியும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Jun-25, 1:08 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 3

மேலே