தமிழா விழித்தெழு
எந்நாட்டிலும் தமிழருக்கு வாழ்வில்லை!
எங்கேயும் அவருக்கு மதிப்பில்லை!
தண்ணீருக்கும் கையேந்தி வாடுகிறான்
பாமரராய் விலங்குகளாய் வாழுகிறான்
சொன்னாலும் புரியாத இனமானான்
சோற்றுக்கு அலைகின்ற ஜடமானான்
தன்மானம் மறந்திட்ட தறுதலையா?
தரங்கெட்டு வாழ்வது பழுதிலையா?
உழைப்புக்கு ஏற்றதோர் ஊதியமில்லை
உதைபடும் தருணத்திற்கு அளவில்லை
பிழைப்புக்கு வழிதெரியாப் பேதையானான்
போதையில் தடுமாறி வீழ்ந்துபோனான்
தன்னாற்றல் வளர்த்திடத் தெரியவில்லை
தகுதியோடு வாழுகின்ற நிலையுமில்லை
சொந்தமொழி உறவுக்கே பகையானான்
வேற்றுமொழி மோகத்திற்கு விலைபோனான்
ஏற்றமிகு வாழ்வுபெறும் நிலையுண்டா?
இனிவரும் தலைமுறைக்கு விடிவுண்டோ?
தூற்றும் நிலைமாறும் விதியுண்டா?
தொல்புகழை மீட்டெடுக்க வழியுண்டா?

