அண்ணல் அம்பேத்கார்
"அந்த கனத்த சட்ட புத்தகம்"
=====================================================ருத்ரா.
(ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!)
ஒரு சுதந்திரத்தின் கருவறையில்
இன்னொரு சுதந்திரத்தின் கல்லறையும்
கட்டிவைக்கப்பட்டிருந்த
விசித்திர வரலாறு கொண்டது
நம் இந்திய தேசம்.
மனிதனை மனிதன் கைகுலுக்கிக்கொள்ளும்
மானிடப்பூவின் மாணிக்க மகரந்தங்கள்
இந்த உலகத்தின் காற்றையே
தூய்மைப்படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்
இங்கு மட்டும் "தொட்டால் தீட்டு"
என்று அநாகரிகத்தின்
முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்ததே!
அதில் வெளிப்பட்ட சிந்தனைச்சீற்றத்தின்
விடியல் "உருவகமே" அண்ணல் அம்பேத்கார்!
மூவர்ணக்கொடியேந்தி சுதந்திரத்தின்
மூச்சுக்காற்றை முழங்கியவர்களின்
நரம்புப்புடைப்புகளில் எல்லாம்
நாலு வர்ணம் அல்லவா குதித்தோடிக்கொண்டிருந்தது.
தளை என்றால் தமிழில் "கட்டு"என்று பொருள்.
அப்படித் தளையில் தளைக்கப்பட்டு கிடக்கும்
கருஞ்சிறுத்தைகளின் கட்சியைத்தான்
தலித்துகளின் புதிய யுகமாய் திரட்டியவர் அம்பேத்கார்.
தலித் எனும் சிங்க மராட்டியனின் அந்தக்கவிதையில்
தமிழின் விடுதலைத்தாகமும் இருந்தது என்பது
இன்றும் நாம் காணும் உண்மை.
துப்பாக்கித் தோட்டாவுக்கு
பசுக்கொழுப்பா? பன்றிக்கொழுப்பா? என்று
மதக்கொழுப்பு கொழுந்து விட்டு எரிந்ததில்
ஒரு சிறு பொறியே
நம் நாட்டின் விடுதலைத்தீ வெள்ளத்தை
கர்ப்பம் தரித்தது..அதை
அற்பம் ஆக்க வந்ததே சாதீயின் ஆதிக்கம்.
சாதிக்கொடுமையை
சான்றோர்களே தவறு என உணர்ந்து கொள்ளச்செய்து
தன் ஓங்கி உலகளந்த கல்வியால்
சட்டமும் பொருளாதாரமும் கற்றுத்தேர்ந்த
மாமேதை நம் அம்பேத்கார்.
கங்கையைக் கொண்டு
கண்னில் கண்டதையெல்லாம்
சுத்தப்படுத்திய
அந்த சனாதனிகளின் கங்கையை
சுத்தப்படுத்தியது
அந்த கனத்த சட்டப்புத்தகம் மட்டுமே.
அந்த கறுப்புத்தங்கத்தின்
கை பட்ட புத்தகம் அல்லவா அது!
மேன்மை மிக்க
நம் முன்னாள் குடியரசு தலைவர்
அப்துல் கலாம் அவர்கள்
கனவு காணுங்கள் என்று
சரியாகத்தான் சொன்னார்.
இன்னும் தழல் வீசும் அந்தக்கனவே
நம் இதயம் நிறைந்த அண்ணல் அம்பேத்கார்.
ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!
==================================================

