படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக்கவிதை - அவளுக்கொரு ஓவியம்

அபூர்வ வண்ணங்களால் கலந்தப்
பொழுதினால் தீட்டிய நாளொன்று

அன்று மலராத மொட்டுக்களின்
மௌனத்தில் ஒளித்து வைத்திருந்தாள்
சின்ன சின்ன ஆசைகள்...!!

ஆர்ப்பாட்டமில்லாமல் விலகியும் பின்
சேர்ந்திருந்த மேகக்கூட்டத்தின் நடுவே
அவளுக்கு மட்டும் காதல்மழை...!!

அசையாதிருந்த அவள் விழிகளுக்கு
எதிரெதிரே மோதிய வண்ணத்துப்பூச்சிகள்
கொஞ்சம் சிரிக்க சொன்னது...!!

அலையும் அவள் கூந்தலை
உதிரும் மரத்தின் இலைகள்
சமாதானம் செய்திட முயன்று
தோற்றுக் கொண்டே இருந்தது...!!

அவள் விரல்கள் மீட்டாத போதும்
கேட்கும் இசையில் உறங்கியே
போனது அந்த வயலின்...!!

தன்னைத்தானே மீண்டும் மீண்டும்
தொலைத்துக் கொண்டும்...
மீட்டுக் கொண்டும்...
ஓவியம் வரைந்து முடிக்கும்வரை
கா(வாழ்ந்)த்திருந்தாள்...!!

வரைபவன் ஓவியன் மட்டுமல்ல...!!!

எழுதியவர் : மணிமேகலை (9-May-15, 9:16 pm)
பார்வை : 164

மேலே