என் வாழ்க்கை பயணம் - 7

கடந்தப் பகுதியில் அனுபவங்களைவிட , பொதுவான விடயங்களையும் , என் வாழ்வில் எடுத்த முக்கிய முடிவுகளையும் கலந்து பதிவு செய்திருந்தேன் . நத்தைபோலத்தான் நகர்ந்திருக்கும் . என்றுமே மனதில் உள்ளவைகளை நினைவுக்கு வருவதை அப்படியே சொல்லிவிட துடிப்பவன் நான் ...அதுதான் வேறில்லை .
ஒரு கதம்ப மாலை போல , ஒன்றாய் கலந்த பல்வேறு உணவு வகைகளாய் இருந்திருக்கும்.
சாதாரணமாகவே எனக்கு மறதி காரணமாக , நினைவலைகளில் நீந்தினாலும் , உணர்வலைகளில் மூழ்கினாலும் , கரை சேரும்போது , கையில் சிறு சிறு நீர்த்திவலைகள் மட்டுமே நிற்கிறது . இதனால் அதிகம் அக்கால நிகழ்வுகளையும் நினைவுகளையும் கோர்வையாக எழுத முடியவில்லை .
ஒருமுறை பள்ளியில் அம்மைத் தடுப்பூசி போடுவதற்காக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையை சார்ந்த குழு ஒன்று வந்தது. எனக்கு அப்போதெல்லாம்
ஒந்த ஊசி போட்டுக்கொள்வது என்றாலே அலர்ஜி... பயம் .. வலிக்கும் என்று. நான் அங்கு செல்வது போல வகுப்பில் இருந்து வெளியே சென்று , கழிவறையில் ஒளிந்துக் கொண்டேன் . எங்கள் பள்ளியில் அந்த இடமெல்லாம் மிக சுத்தமாக இருக்கும் , இப்போது எப்படி என்று தெரியவில்லை ...என் முறை வரும்போது நான் உடல்நிலை காரணமாக லீவில் உள்ளதாக சொல்லிட வேண்டுமென நண்பர்களிடம் சொல்லிவிட்டேன் . ஆண்டு ஒருவழியாக தப்பித்தேன் ....மறுநாள் என்னை உதவி தலைமை ஆசிரியர் அழைப்பதாக , ஒரு ப்யூன் வந்து என்னை அழைத்து சென்றார் . நூலகம் உள்ள பகுதிக்கு சென்றேன் .. அங்குதான் அவர் இருப்பதாக சொன்னார்கள். நான் முன்னாள் நடந்ததையே மறந்துவிட்டேன் . அங்கு யார் யாரோ அமர்ந்து இருந்தார்கள் . உள்ளே சென்றவுடன் ஒருவர் என்னை கெட்டியாக பிடித்துக்கொண்டார் . நீதானே நேற்று பொய் சொல்லி தப்பித்துக் கொண்டாய் ....என கோபமாக கேட்டார். நான் அப்போதும் புரியாமல் மிரண்டு போயிருந்தேன் ....மற்றொருவர் என் இடது கையைப் பிடித்து உடனடியாக ஊசி போட்டு விட்டார் ... அன்றைய அலறல் சத்தம் அந்த கட்டிடத்தையே சற்று அதிர வைத்து , என்னை அழவும் வைத்து விட்டது.
அப்போதுதான் புரிந்து கொண்டேன் அங்கு இருந்தவர்கள் நேற்று வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று. வாழ்க்கையில் கரடுமுரடான பாதையில் கடந்து வந்தேன் என்று கூறுவார்களே .. அதுபோல இதுவம் ஊசி , வலி என்ற பாதை என்றே வைத்து கொள்ளுங்கள் ...
இளமைக்காலத்தில் ஏற்படும் அச்ச உணர்வுகள் , தாழ்வு மனப்பன்மை , பலவித குழப்பங்கள் , பருவக் கோளாறுகள் , பழகும் விதம் , பேச்சுத் திறன் , ஆழ்ந்து சிந்திக்கும் பண்பு , அடுத்தவரை மதிக்கும் குணம் , விளையாட்டில் ஆர்வம் , இப்படி பல பல செயல்கள் , நாம் பிற்காலத்தில் வளர்ந்தவர் பெரியவர் ஆனாலும் சில இயல்புகள் மாறாமல் அப்படியே நிலைத்துவிடும். ஆகவே நம் குணாதிசயங்களுக்கு அடிப்படை அடித்தளம் அந்த கால கட்டம்தான் . அதில் இருந்தே நாம் ஒழுக்கமுடன் , ஒரு இலக்குடன் வாழ ஆரம்பித்தால் நம் வாழ்வும் சிறக்கும் என்பதில் ஐயமே இல்லை.
அதேபோன்று இன்னொரு முக்கியமான விஷயம் .....இளமைப்பருவத்தில் இருந்தே புத்தகங்கள் , நாளேடுகள் படிக்க வேண்டியது மிக மிக அவசியம் . சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் இதை. பொது அறிவு வளர்க்க மிக முக்கியமானது படிக்கும் பழக்கம் என்பது. பேரறிஞர் அண்ணா அவர்கள் எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டே இருப்பார் என்று கூறுவார்கள். அதுமட்டுமன்றி ஒவ்வொரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போதும் அவர் இதை மிகவும் வலியுறித்தி கூறுவார் .
இதை நான் அழுத்தமாக சொல்வதற்கு காரணம் , இது அறிவுரை கட்டுரை அல்ல , அனுபவக் கட்டுரை . நான் முன்னர் , மிகப்பெரிய எழுத்தாளர்களான , சுஜாதா , இந்துமதி , சிவசங்கரி , ராஜேஷ்குமார் , ஜெயகாந்தன் , தமிழ்வாணன் , லேனா தமிழ்வாணன் , உதயமூர்த்தி , லக்ஷ்மி , கல்கி , சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களையும் , எழுத்துக்களையும் , கவிஞர் கண்ணதாசன் , வைரமுத்து , சுரதா , வாலி , மேத்தா , அப்துல் ரஹ்மான் , நா காமராசன் போன்றோரின் கவிதைகளையும் விரும்பி படிப்பவன் . உண்மையில் தற்சமயம் சற்று குறைந்துவிட்டது ..அதற்காக வருத்தப்படுவதும் உண்டு .
இங்கே தளத்தில் பலரும் அவரவர் திறனுக்கேற்ப கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்கள் . உண்மையில் பார்த்தால் , ஒவ்வொன்றுமே வேறுபடும் , எழுதுகின்ற முறையில் , சொல்ல வருகின்ற கருத்தில் ..... அதில் மாற்றுக் கருத்தே இல்லை . நம் தளத்தைப் பொருத்தவரையில் அனைவருமே எல்லாவற்றையுமே படிப்பதில்லை என்பது உண்மை ...என்னையும் சேர்த்து . ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் . அதைப்பற்றி நான் குறை கூறவோ, கருத்தளிக்கவோ விரும்பவில்லை.
மீண்டும் சந்திப்போம் ....
பழனி குமார்