ராகமாலிகை
நான் பார்த்த பார்வைகளில்,
உன் முகம் சங்கராபரணம்!
நான் மோகித்த இரவுகளில்,
உன் நினைவு ஹிந்தோளம்!
நான் கொண்ட காதலில்,
உன் அழகு ஆனந்த பைரவி!
நான் காதலைச் சொல்கையில்,
உன் நாணம் சகானா!
நான் சொல்லும் துணுக்குகளில்,
உன் சிரிப்பு காம்போகி!
நான் தரும் ஆச்சர்யங்களில்,
உன் மொழி சாரங்கா!
நான் மதி இழக்கையில்
உன் மதி பிலஹரி!
நான் வெற்றி பெறுகையில்,
உன் உவகை கல்யானி!
நான் கோபம் கொள்கையில்,
உன் நிதானம் ஸ்யாமா!
நான் தவறு செய்கையில்,
உன் கோபம் ஆரபி!
நான் அச்சப் படுகையில்,
உன் தைரியம் அட்டானா!
நான் அழ நேர்கையில்,
உன் தோள் தோடி!
நான் நம்பிக்கை இழக்கையில்,
உன் ஆறுதல் வசந்தா!
மொத்தத்தில்...
நான் பாடுகிற இவ்வாழ்க்கைப் பாட்டில்,
நீ ஒரு ராகமாலிகை!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
