உலகமே உச்சரித்து பாருங்கள்
பாசத்தின் பகிர்வுக்காய்
நீதி கேட்டு இவர்கள் பாதங்கள்
எத்தனை தடவைகள் சென்றன
அத்தனையும்
செயலற்றுப் போய்
உறவுகள் அழிந்தவண்ணமே...
இவர்கள் மரணசாசனம்
மறந்து போன மனங்கள்
மாய்த்துப் போன பிணங்களே!
இவர்கள் அங்கத்தில்
பற்றிய அக்கினியை விட
உறவுகள் சொந்த மண்ணில்
வேகும் தீயே
தாங்கொண்ணாதென்று
தவமின்றிக் கிடைத்த இவர்கள்
இனிய வாழ்வையும் உயிரையும்
உடலையும் தானம்
செய்த அக்கினிப் பூக்களே!
நாட்டின் சாதனை சின்னங்கள்
வரலாற்றுப் பதிவேட்டில்
பதிக்கப்பட்ட நாயகர்கள்.
உலகத்துக்கு உணர்த்திய பாடம்
உள்ளத்தினை கிழிக்கிறது.
உணர்வுகள் கிளறி
இவர்கள் இலட்சியப்
பாதத் தடங்களையே
உற்றுப் பார்க்கிறது
திண்மமாய் உறைந்த
உணர்வுகளை உருக்கி
விட்டீர்களே திரவமாய்
உலகமெங்கும் பரவ
நாளை என்றே
இன்றை கடத்த
காலம் எமக்கில்லை
கையில் ஏந்துங்கள்
கனனென்ற வார்த்தைகளால்
உயிராயுதம் ஏந்தினார்கள்.
நொடிகூட தாமதம் வேண்டாம்
நொந்து வெம்புகிறது
எம்மினம் என்று தன்னையே
எரித்த சரித்திரப் பூக்கள்!
உறுதி யென்ற அணை கட்ட
உறுதி பூண்டு வாருங்கள்
என்ற கோஷத்துடன்
தமிழ் இனி மெல்லச் சாகும்
தமிழன் வேகமாக
சாவான் என்றதே!
தொப்பிள் உறவான
முத்தான முத்துக் குமாரன்.
என் இனத்தின் அழிவைத்தடுத்து
நிறுத்த தவறிய உலகமே....
தட்டியெழுப்ப என்னுடைய
இனிய உயிரை
வழங்குகின்றேன்
என்று படித்து முடிப்பதற்குள்
சிதறி உடைந்தனவே
கண்ணீர் துளிகள்
முருகதாசனே!
உலகமே இவர்கள்
மரணசாசனத்தை மீண்டும்
உச்சரித்துப் பாருங்கள்
உண்மையை உங்கள்
உதடுகள் சொல்லட்டும்
கல்லாய் போன
உங்கள் மனம்
பதறும் உறவுகளின்
கண்ணீர் பட்டுக் கூட
சாயாதா எங்கள் பக்கம்
முத்துக்குமாரனில்
பற்றிய தீ
தொட்டுத் தொடர்கிறது...
அக்கினித் தியாகிகளின்
அணையாத தீப
ஒளியில் விழிக்காதா?
உங்கள் விழிகள்
இவர்கள் இலட்சியம்
உதயமாக
உச்சரித்துப் பாருங்கள்
ஒரு தடவை
-மட்டுநகர் கமல்தாஸ்