மனிதநேயக் கிரீடம் அணியுங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
மனிதநேயக் கிரீடம் அணியுங்கள்
குழந்தைச் செல்வங்கள், குமுத மலர்க் கொத்துகள்.
குடும்ப விளக்குகள், குளிர் தென்றல் அலைகள்.
உவகைமிகு சர்வதேச உயிர்ச்சிலைகள் மழலைகள்.
உயிர் அதிசயங்கள், உணர்வுக் காவியங்கள்.
தாழ்வது வந்தாலும் தைரியம் தருகின்ற
வாழ்வுக் கடலின் வைரத் தெப்பங்கள்.
***
உலகத்து உதடுகள் உணர்ந்து புகழும்
உன்னத தீபங்கள் உளி செதுக்காச் சிலைகள்.
மனவாதை இருளின் ஒளி தேவதைகளின்
மனங்கவர் புன்னகை, மழைமின்னல கீற்றுகள்.
வாழ்க்கைச் சுவடுகளின் காலடித் தடங்கள்.
வாழும் கவிதையாய் நடமிடும் மழலைகள்.
***
பெற்ற செல்வங்களைப் பேணத் தவறிடில்
சுற்றம் தொலைந்திடும், பற்று அறுந்திடும்.
குற்ற உணர்வுடன் வெற்றி தொலைப்போம்.
மற்றவர் போற்றிடும் நிலை விலகிடும்.
காற்றுள்ள போது கறைகளைத் தூற்றாவிடில்,
ஆற்றில் வெள்ளமாய் சேற்றோடவர் புரள்வார்.
***
கற்ற அறிவாலெவரும் கொற்றம் பெறலாம்,
நற்றமிழ் வானில் துருவ நட்சத்திரமாகலாம்,
பண்பு மேடையில் அன்பு வாழ்வமைக்கலாம்,
இன்ப நகரத்துச் சரித்திர நுழைவாயிலாகலாம்,
மழலைப் பூக்களை மதித்து அணைத்தால்.
மனிதநேயக் கிரீடம் மகிழ்ந்து அணியலாம்.
***
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்
10-7-2006.