அம்மா கவிஞர் இரா இரவி

அம்மா ! கவிஞர் இரா .இரவி !

உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் இணைந்த
உயிர்கள் உச்சரிக்கும் உன்னத சொல் அம்மா !

உலக உறவுகளின் சிகரம் அம்மா
உலகம் போற்றிடும் உன்னத உறவு !

உயிரும் உடலும் தந்த வள்ளல்
உயிர் வளர்த்த உன்னத செம்மல் !

வயிற்றில் இருக்கையில் எட்டி உதைக்கையில்
வலிதாங்கி எண்ணிச் சிரித்து மகிழ்ந்தவள் !

வலிகளின் உச்சம் என்பது பிரசவவலி
வலிமையோடு வலி தாங்கி ஈன்றவள் !

அழுகையின் காரணம் அறிந்து உடன்
அவற்றை நிறைவேற்றி மகிழ்ந்த உள்ளம் !

தன் தூக்கம் மறந்து பெற்ற
தன் சேயின் தூக்கம் காத்தவள் !

பாலோடு பாசமும் தந்திட்ட பாரி
தேனோடு மருந்தும் தந்திட்ட ஓரி !

கண்ணும் கருத்துமாய் கவனித்து வளர்ப்பவள்
கட்டியவனை விட குழந்தையை நேசிப்பவள் !

கெட்டவன் ஆனாலும் விட்டுத்தர மாட்டாள்
நல்லவன் என்றே மற்றவரிடம் வாதிடுவாள் !

உலகமே வெறுத்து ஒதிக்கினாலும் அவள்
ஒருபோதும் வெறுப்பதில்லை பெற்றவனை !

உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
ஒப்பற்ற பெற்ற அம்மாவிற்கு நிகர் ஏதுமில்லை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (15-May-16, 10:20 am)
பார்வை : 108

மேலே