என்ன தவம் செய்தோம்

என்ன தவம் செய்தோம்?

புத்தன் காந்தி பூலித்தேவர்
கட்டபொம்மன் உதித்த மண்ணில்
கர்வம் கொண்டே தோளினை உயர்த்தக்
கருணைக் கடவுள் நம்மைப் படைத்திட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..!

விழிசெவி வாயொடு காலும் கையும்
அவயங்க ளனைத்தும் இயக்கத்தில் இருக்க
கேட்டும் களித்தும் ஓடியும் ஆடியும்
புன்னகைப் புரிந்தே புவியினில் உலவிட
நல்ல தவம் செய்தோம் - நாம்
நல்ல தவம் செய்தோம்..!

சைகையில் பேசி மொழியின்றித் திரிந்தார்
ஒலியின்றி மொழியும் ஒளிந்தே கிடந்தது
முதன்மை மொழியாய் தமிழே தவழ்ந்தது
அமிழ்தத் தமிழை அள்ளியேப் பருகிட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..!

வீட்டில் விசேடம் துக்கச் செய்திகள்
அறிவிக்க அடித்தோம் அந்நாள் தந்திகள்
சேரும் முன்னே செயல்களும் முடிந்திடும்
சொடுக்குங் காலம் செய்திகள் கொடுத்திட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..!

கணினி படைத்தார் கை பேசியளித்தார்
கடலும் கடந்த உறவுகள் எல்லாம்
நினைக்கும் நேரம் கைக்குள் தோற்றம்
நேரலைப் பேச்சினில் நெஞ்சம் நெகிழ்ந்திட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..!

சந்தைக்கென்றே நேர மொதுக்கி
ஓடி அலைந்தோம் பொருள்களைத் தேடி
காய்கறியோடு உணவும் உடையும்
கதவைத் தட்டி வந்தே கொடுத்திட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..?

காவிரிபொன்னி கருகிடும் நிலையினில்
கைகளை விரித்தது கர்நாடகமும்
கபிணியில் குதித்து மிரட்டிட மழையும்
கருணையில் ஆறுகள் ஏரிகள் நிறைந்திட
என்ன தவம் செய்தோம் - நாம்
என்ன தவம் செய்தோம்..!

நவீன உலகில் வஞ்சம் பஞ்சம்
எட்டு வழிக்காம் வயல்வெளி தெய்வம்
நிலத்தைப்பறித்தார் நட்டார்க் கல்லை
எட்டத்தூக்கி நட்டதை எரிந்திட
இன்னும் தவம் செய்வோம் - நாம்
இன்னும் தவம் செய்வோம்..!

எத்தர்கள் எங்கிலும்நிறைத்தார் கோடி
சத்தியம் யாவும் ஒளிந்தது ஓடி
காமராஜர் பாதையைத் தொடர்ந்து
நாமும் நாட்டுக்கு நற்செயல் புரிந்திட
இன்னும் தவம் செய்வோம் - நாம்
இன்னும் தவம் செய்வோம்..!

தவங்கள் இன்னும் வளர்த்திட வேணும்
மதங்கள் பிடித்த மனிதர் நாட்டில்
நேயம் கொன்றார் தலைவன் என்றார்
மாயங்கள் புரியும் சாயங்கள் வெளுத்திட
நாளும் வதம் செய்வோம் - நாம்
நாளும் வதம் செய்வோம்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (26-Aug-25, 10:24 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 73

மேலே