நான் சாகப்போகிறேன்

நான் சாகப்போகிறேன்

ஆம்

என்னோடு சேர்ந்து
நான் என்னும்
இந்த ஆணவமும் சாகட்டும்

அழகு அழகு
என்று சொல்லும்
இந்த பொய்யும்
சாகட்டும்

மனசாட்சி
இல்லா
இந்த நெஞ்சம்
சாகட்டும்

ஆபத்திற்கு
ஓடா
இந்த
கால்கள்
வெந்து கருகட்டும்

பிறரை
அழவைக்கும்
இந்த வாய்
அழுகட்டும்

மற்றவர்
கண்ணீரை
துடைக்கா
கைகள்
உடையட்டும்

பிறர் வலியை
கண்டும்
துடிக்கா
இவ்வுடல் துடிக்கட்டும்

தமிழை கேட்கா
இக்காதும் செவிடாகட்டும்

பார்வையை உணர்ந்த தருணம்
பாதையை முடிக்கிறேன்
ஆனால் பார்வை முடியாது
பிறர் கண்ணில் பாதை தொடரட்டும்
கண் தானம் செய்தேன்(வோம்)

நான் வாழப்போகிறேன்
எட்டு திசையும்
என் பெயர் பாடும்
கொட்டும் மழையும்
எனை நனைக்கும்
வீறு கொண்டு எழுவேன்
தமிழ் வித்தென முளைப்பேன்
எங்கும் எதிலும்
நானாய் நிற்பேன்
கொடியில் பூத்த பூவும் நானே
வேரும் நானே
மண்ணும் நானே
இசை பண்ணும் நானே
சொல்லும் நானே
விழியும் நானே
பார்வையும் நானே
தமிழ் செய்யுள் நானே
செய்யும் தொழிலும் நானே
கடவுளும் நானே
காரிருளும் நானே
ஒளியும் நானே
தமிழே நானே
தமிழா நானே
நானே நாமே


யார் கண்டும்
அஞ்சிவிடாதே
மனிதா
விதை என்று
மண்ணை
முட்டி முட்டி முளை
விண்ணை அடை

போகும் பாதையில்
கற்கள் இருந்தால்
பள்ளத்தில் போட்டு மூடு
பாதை வளரும்
முட்கள்
இருந்தால்
அதை அரணாக்கு
உனக்கு பகைவர்
உன் இலக்கு தான்
அதை அடையும் வரை ஓயாதே
ஒதுங்காதே

முண்டாசு கவியின்
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
அதனுடன் உன் இலக்கு
இதுவே உன் விழியின் இலக்கு (கண்ணின் காட்சி )

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Jul-16, 6:56 pm)
பார்வை : 238

மேலே