கோவில்கள்- பழங்காலத்தில் 1

வரலாறு சமேதமா ஏதாவது எழுதலாம்னு முடிவு பண்ணிட்டு சும்மா உக்காந்திருந்த நேரத்துல நண்பன் ஒருவன் வாடா கோயிலுக்கு போய்ட்டு வரலாம்ன்னு கூட்டி போனான் . அது பழங்காலத்து கோவில் , அதனை பார்வையிட்டு கொண்டே வருகையில் நான் கோவில்களை பற்றி எழுதலாம்னு முடிவு பண்ணேன்...
மன்னர்கள் அனைவரும் தங்களால் ஆன நினைவு சின்னங்களை காத்து விட்டு சென்றுள்ளனர் , அதில் தமிழகத்தை பொருத்தவரையில் மன்னர்களின் அடையாளமாக ஒரு அரண்மனை கூட இல்லை என்பது ஆச்சிரியமான உண்மை.. அவர்கள் பேரும் புகழும் பறைசாற்றும் வண்ணம் எஞ்சியும் இன்றுவரை மிஞ்சியும் இருப்பது கோவில்கள் மட்டுமே.. நம் காலத்தை விடுங்கள் அக்காலத்தில் கோவில்களின் பங்கே தனி ...
ஆம் கண்டம்தாண்டிய ராஜ்ஜிய பேரரசரும் சரி குக்கிராமத்து சிற்றரசரும் சரி ஏதேனும் ஒரு கோவிலை பராமரித்துதான் வந்துள்ளனர். ஏனென்றால் , கோவில்கள் அன்று பக்திகான இடமாக மட்டுமன்றி இன்னும் பற்பல செயல்களின் கலைகளின் நிகழிடமாக திகழந்தது. ஆம் சிற்ப கலையின் கண்காட்சியிடமாக கோவிலிருந்தது. நடன நாட்டிய நிகழ்ச்சிகளுக்கான மேடை ஒன்று அனைத்து கோவில்களிலும் உண்டு. மேலும் மண்டபங்கள் இல்லாத கோவிலே கிடையாது எனுமளவில் மண்டபங்கள் இருந்தன அவை நெடுந்தூர பிரயாணிகளும் வழிபோக்கர்களும் , வியாபாரிகளும் தங்கி உறங்கி ஓய்வெடுக்க பயன்பட்டது, அவர்கள் களைப்பார குளிக்கவும் தனது உடை மற்றும் உடமைகளை தூய்மை படுத்த குளம். இருந்தது.
அவர்களின் பசியை போக்க அன்னதான மண்டபங்களும் இருந்தன ஆகவே வருகிறவர் யாராயினும் யாரிடமும் யாசகம் கேட்க வேண்டியதில்லை. மேலும் அக்காலத்தில் அரசு திட்டத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும் , கவிஞர்களின் நூல்கள் அரங்கேற்றவும் கோவில்களே பிரதான இடமாக இருந்தன , ஆக குளம் மண்டபம் சிற்பவாயில் , என பல பகுதிகளை கோவில்கள் கொண்டுள்ளது நிதர்சனம்.
அதை விட அரசாட்சிகள் அரசர்கள் கோவில்களுக்கு குடுத்த முக்கியதுவம் அபரிதமானது. அரசர்கள் கோவிலை பொருளாதார ரீதியிலும் கையாண்டுள்ளனர் . இராஜராஜ சோழனும் அதற்கு பின் வந்த சோழ மன்னர்களும் தமது ஆட்சியின் வணிக நிலையில் கோயில்களையும் ஒரு பங்குதாரராக பயன்படுத்தியுள்ளனர் (இன்றைய ஷேர் மார்க்கேட் மாதிரி ஆனால் மோசடியின்றி).. அதாவது வியாபாரிகள் கட்டும் வரிபணத்தை அரசு துறைகளுக்கு பிரித்தது போக ஒரு சமபங்கு குறிபிட்ட அல்லது கட்டுபாட்டிலுள்ள கோவில்களை சேரும் . இதனால் கோவில்களை சீராக பராமரிக்க முடிந்தது .
இராஜராஜன் வருகைக்கு பின்னே இப்பராமரிப்பில் புதிய மாற்றங்கள் கொண்டுவர பட்டன(கம்யூனிட் ஆட்சிக்கு வந்தது போல) . எப்படியென்றால் கோவிலை ஒரு தனி அரசாங்கம் போல நடைமுறை படுத்தினர் அவர்களுக்கும் முந்தைய அரசர்கள். நிர்வாகி ஒருவர் தர்மகாரயதரிசி ஒருவர், காப்பாளர் ஒருவர் போல பல்வேறு துறைகளும் செயல்களும் அடங்கும்..
மன்னர் ராஜராஜன் அவற்றை வெவ்வேறு மக்களிடம் ஒப்படைத்தார் . உதாரணமாக வணிகர் ஒருவர் கோவிலின் வருமானத்தை கொண்டு வாணிபம் செய்து வரும் வருவாயில் லாபத்தை இரண்டாய் பிரித்து முதல் தொகையும் அல்லது அதன் பகுதியையோ உடன் வந்த லாப பங்கை கோவிலுக்கு வழங்கவேண்டும். என்பது போல்..
மேலும் கோவில்கள் சமூகநலனுக்காக பல்வேறு முறையில் பயன்பட்டது குறிப்பிட தக்கது. முதலில் பெரும் வணிகரோ அல்லது அரசரோ தமது கொடையாக செல்வங்களை வழங்குவர். செல்வமென்றால் பணமோ நகையோ அல்ல..
பசுக்களும், ஆடுகளும், வயல்களும் தானமாக வழங்குவர் . அவற்றை வளர்க்கும் அல்லது பாதுகாக்கும் பொறுப்பை அரசோ அல்லது கோயில் நிர்வாகமோ ஊர்மக்களில் தேர்ந்தெடுத்த சிலரிடம் வழங்கும் , அப்படி பொறுப்பேற்றவர்கள், தினமும் பால் நெய் வெண்ணை போன்ற பொருள்களை வரி போல கோயிலுக்கு வழங்குவர். இதனால் விளக்கிற்கு நெய் அபிஷேக பால் மட்டும் கிடைப்பதன்றி ஒரு குடும்பமும் செழிக்கும்.
தஞ்சாவூர் பெரியகோவிலிலுள்ள சிவலிங்கத்துக்கு அருகிருலுள்ள நந்தா விளக்குக்காக ராஜராஜன் 90 பசுக்களை தானமாக வழங்கியதாக ஒரு தகவலுண்டு.
வயல்களை பொறுப்பேற்றோர், அதில் விவசாயம் செய்து விளைச்சலில் ஒரு பங்கோ அல்லது குறிபிட்ட அளவையோ கோயிலுக்கு வழங்கவேண்டும் இதனால் பெறப்படும் தானியங்கள் சேமிக்கபட்டு அன்னதானத்திற்கும் பஞ்சகாலத்திற்கும் பயன்படுத்தபடும்..
ஒரு சில பெரும் கோயில்கள் அதனை சுற்றியுள்ள சின்ன சின்ன கோயில்களை தன் கட்டுபாட்டில் எடுத்து பராமரிக்குமாம் அப்படி தஞ்சாவூர் கோயிலின் கட்டுபாட்டில் 800 கோயில்களும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கட்டுபாட்டில் 1400 கோயில்களும் இருந்ததாகவும் , இலங்கை கதிர்காம கோயிலும் தஞ்சை கோயிலின் கட்டுபாட்டில் பராமரிக்கபட்டிருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன..
மேலும் வியாபாரிகளும் வழிப்போக்கர்களும் தத்தம் வசதிகேற்ப தானங்கள் செய்துள்ளனர் அவற்றை கோயில்கள் பராமரிக்கின்றன . மொத்தத்தில் கோயில்கள் அக்காலத்தில் , வங்கிகளாகவும் சேமிப்பு கிடங்குகளாகவும் , விடுதிகளாகவும், அன்னசாவடிகளாகவும் பெரும் பணி செய்துள்ளன . கடவுள் என்றில்லாமல் சமூக நலனுடன் செயல்பட்டிருந்திருக்கின்றன. எந்த மேலைநாட்டு சரித்திரத்திலும் இப்படி இருந்ததில்லை தமிழன் கடவுளைகாட்டி வாழவைத்துள்ளான்..
இதுமட்டுமின்றி போர்செய்து வென்ற நாட்டின் உடமைகளை அதாவது நிலம் பசு போன்ற செல்வங்களை அங்குள்ள பெரிய கோவிலுக்கு பாதியை தானமாய் அளித்துவிட்டு வந்த நிகழ்வுகளும் நம் தமிழின் வரலாற்றை கீரிடமாய் அலங்கரித்துள்ளன . பெருமைபடுங்கள் எந்த சர்ச்சும், அரசும், இன்றுவரை செய்யாத காரியங்களை அன்றே தமிழன் செய்திருக்கிறான் என்று

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (7-Apr-17, 8:07 pm)
பார்வை : 591

சிறந்த கட்டுரைகள்

மேலே