தமிழ் பேசும் இந்தியன்

பார்த்தேன்..!
மழை வெயில் இல்லா வானம் பாரத்தேன்..மழை வெயில் வந்ததும் கூரை பார்த்தேன்!
மூன்று வேளை உணவைப் பார்த்தேன்..
பற்பல வண்ண ஆடைப் பார்த்தேன்!
சிறு காயம் பட்டு ரத்தம் பார்த்தேன்..
மருந்து செய்யும் மாயம் பார்த்தேன்!
துணை தந்த காதல் பார்த்தேன்..
தேடிச் சென்று பின் காமம் பார்த்தேன்!

'தமிழன்' நான்..! 'இந்தியன்' நான்..!
ஆசை அடங்கா 'மனிதன்' நான்!!

பார்த்தாய்..!
பச்சைப் புல்லின் மணம் பார்த்தாய்..
பச்சிளம் குழந்தை பிணம் பார்த்தாய்..!
சிலை உயிர் பெற்ற பெண் பார்த்தாய்..
முலை அறுபட்ட அவள் உடல் பார்த்தாய்..!
பாலும் இரத்தவும் உறைந்த பின்பும்
பெண் காம்பை உறிஞ்சும் பிள்ளை பார்த்தாய்..!
சகோதரன், உதவ நான் வருவேன் என்று..தாய் மொழியில் நீ கத்திப் பார்த்தாய்!
கண் துடைப்பாக நான் வரப் பார்த்தாய்..
கண்ணீர் தந்து, கண் துடைத்தேன் பார்த்தாய்!

வீரத் தமிழ் ஈழத் தமிழா....

தமிழன் அல்ல, மனிதனும் அல்ல..
'செவிடன்' நான்! 'குருடன்' நான்!
உன்னுடன் பிறந்த கோழை நான்!!
வாடிக்கை என்றுனை வேடிக்கை பார்க்கும்..
"தமிழ் பேசும் இந்தியன்"நான்!!!

#யான்

எழுதியவர் : யான் (12-Jul-17, 12:00 am)
சேர்த்தது : Yaan
பார்வை : 425

மேலே