புழுக்கள்

ஊடுருவிச் செல்ல எத்தனிக்கும்
ஊமை விதிகளிலிருந்து
தப்ப முயலும் பொழுதுகளில்
மனதின் ஆழ வடுக்களைக்
கீற முயலும் இடைவெளிகளில் ..

கடந்துபோகும் ஒவ்வொரு பார்வையிலும்
நெளியும்
எக்காளச் சிரிப்புகள்...
விரச உரசல்கள்...
விகாரப் பார்வைகள்..
அகங்கார நடை அலங்காரங்கள்
அருவருப்பை உடலெங்கும் சீண்டும்!

சீழேறிப்போன பொய்ம்மை புண்ணைக்
கீறிக் கீறி
தனக்குத் தானே நக்கி நுகரும்
நாய்க்குண மிருதங்கள்...
தப்பித் தப்பி நகரும் வேளைகளில்
நாசுக்காய் நலம் விசாரிப்பதாய்
நஞ்சுதனை நாக்கில் வைத்திருக்கும்
கபடங்கள்...

ஜாக்கிரதை நண்பர்களே..
மற்றவர் முகத்தைச் சொரியும் முன்
சோதித்துக் கொள்ளுங்கள்...

உங்கள் முதுகெழும்புகளை!

எழுதியவர் : முனியாண்டி ராஜ். (3-May-18, 7:12 pm)
சேர்த்தது : Muniandy Raj
Tanglish : pulukkl
பார்வை : 82

மேலே