மகிழ்காலம்

வாசலைக் கடந்து
வீட்டினுள் வந்தாள்
ஒரு குழந்தை
எப்போ வந்தே? என்றேன்
நாளைக்கு வந்தேன் என்றாள்
எப்போ போவே? என்றேன்
நேத்தைக்குப் போவேன் என்றாள்
கடந்த காலத்தை
எதிர்காலமாகவும்
எதிர்காலத்தைக்
கடந்தகாலமாகவும்
மாற்றிச் சொல்லிய
அந்த மழலை
என் நிகழ்காலத்தை
மகிழ்காலமாய் மாற்றினாள்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (24-Feb-19, 2:32 pm)
பார்வை : 725

மேலே