கற்பில் மகளிர் கணவர்க்குக் கூற்றுவர் – அறநெறிச்சாரம் 163
நேரிசை வெண்பா
அயலூ ரவன்போக அம்மஞ்ச ளாடிக்
கயலேர்கண் ஆர எழுதிப் - புயலைம்பால்
வண்டோச்சி நின்றுலாம் வாளேர் தடங்கண்ணாள்
தண்டோச்சிப் பின்செல்லுங் கூற்று. 163
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
கணவன் வேற்றூரை யடைந்த சமயம் பார்த்து, அழகினைத் தரும் மஞ்சளைப் பூசிக் குளித்து கெண்டை மீனையொத்த கண்களுக்கு அழகு பெற மையெழுதி,
கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மயிரிலுள்ள தேனை உண்ணவரும் வண்டுகளை ஓட்டிக்கொண்டு வெளியில் நின்று உலாவுகின்ற வாள் போன்ற பெரிய கண்களையுடையவள்,
கதாயுதத்தினை ஓங்கிக்கொண்டு அவனறியாவண்ணம் தன்னைக் கொண்டானது பின்சென்று தாக்குகின்ற கூற்றேயாவள்.
குறிப்பு:
ஐம்பால் கூந்தல் – குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி என ஐவகையாக முடிக்கப்படும் தலை அலங்காரம்