வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று - பழமொழி நானூறு 175
நேரிசை வெண்பா
வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய்த் - தாளாண்மை
தாழ்க்கும் அடிகோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று. 175
- பழமொழி நானூறு
பொருளுரை:
தம்மோடு தொடர்பில்லாதவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து, தம்மோடு தொடர்பு உடையராய் வந்த விருந்தினரை உபசரித்து, கொடிய போரிடத்து வாளால் செய்யும் ஆண்மையிலும் வலிமை உடையராய், முயற்சியைக் குறைவிக்கும் சோம்பலைக் கொள்ளாதவராய் வருந்திச் செய்யாதவர்களது மனைவாழ்க்கை செப்பம் அடைதல் இல்லை.
கருத்து:
வேளாண்மை, விருந்தோம்பல், வாளாண்மை, தாளாண்மை முதலியன மனைவாழ்க்கை யுடையார்க்கு வேண்டுமென்பதாம்.
விளக்கம்:
மனைவாழ்க்கை திருந்துவதற்கு வாளாண்மையையும் ஒன்றாகக்கூறினார் அஃது ஆடவற்குச் சிறந்தமை பற்றி.
'வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று' என்பது பழமொழி.