வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று - பழமொழி நானூறு 175

நேரிசை வெண்பா

வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய்த் - தாளாண்மை
தாழ்க்கும் அடிகோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று. 175

- பழமொழி நானூறு

பொருளுரை:

தம்மோடு தொடர்பில்லாதவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து, தம்மோடு தொடர்பு உடையராய் வந்த விருந்தினரை உபசரித்து, கொடிய போரிடத்து வாளால் செய்யும் ஆண்மையிலும் வலிமை உடையராய், முயற்சியைக் குறைவிக்கும் சோம்பலைக் கொள்ளாதவராய் வருந்திச் செய்யாதவர்களது மனைவாழ்க்கை செப்பம் அடைதல் இல்லை.

கருத்து:

வேளாண்மை, விருந்தோம்பல், வாளாண்மை, தாளாண்மை முதலியன மனைவாழ்க்கை யுடையார்க்கு வேண்டுமென்பதாம்.

விளக்கம்:

மனைவாழ்க்கை திருந்துவதற்கு வாளாண்மையையும் ஒன்றாகக்கூறினார் அஃது ஆடவற்குச் சிறந்தமை பற்றி.

'வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-22, 11:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 486

மேலே