உய்யான் பிறர்செவிக்கு உய்த்து – சிறுபஞ்ச மூலம் 2

நேரிசை வெண்பா

பொருளுடையான் கண்ணதே போகம்; அறனும்
அருளுடையான் கண்ணதே யாகும் - அருளுடையான்
செய்யான் பழிபாவஞ் சேரான் புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்(கு) உய்த்து. 2

– சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

உலக இன்பமானது செல்வப் பொருளுடையவனிடத்து உண்டாகும்;

நல்லொழுக்கம் இரக்க முள்ளவனிடத்தில் உள்ளதாகும்,

அத்தகைய அருளையுடையவன் பழிக்கப்படுந் தீயசெயல்களைச் செய்யான்,

தீவினையைச் செய்ய மனத்திலும் நினையான்,

புறங்கூற்றுச் சொற்களையும் மற்றையவர் காதுகளில் செலுத்திப் பிழைக்க மாட்டான்.

கருத்துரை:

பொருளுள்ளவனுக்கு இன்பம் பெருகும்; அருளுள்ளவனுக்கு அறம் விளையும்; அருளுள்ளவன் பழியையும், தீவினையையும் புறங்கூறுதலையுஞ் செய்யான்.

‘பொருளுடையான் கண்ணதே போகம்.‘ என்றதனாற் போகத்தைத் தரக்கூடிய பொருளைத் தேடிக்கொள்ள வேண்டியது இன்றியமையாததென்பது பெறப்படும்.

அருளிலார்க் கவ்வுலக மில்லை‘ என்ற குறட்பொருள், ‘அறனும் அருளுடையான் கண்ணதே யாகும்,‘ என்பதில் அடங்கி யுள்ளது.

ஆகும் என்பது தீபகமாக இரண்டிடத்துங் கூட்டப்பட்டது.

எழுதியவர் : காரியாசான் (24-Jun-25, 1:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே