கணையிலும் கூரியவாம் கண் - பழமொழி நானூறு 174

நேரிசை வெண்பா
(’ந்’ ‘ம்’ மெல்லின எதுகை)

யாந்தீய செய்த மலைமறைத்த தென்றெண்ணித்
தாந்தீயார் தந்தீமை தேற்றாரால் – ஆம்பல்
மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
கணையிலும் கூரியவாம் கண். 174

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஆம்பல் பூக்கள் மணவீட்டினைப் போல் நறுநாற்றம் கமழுகின்ற மிக்க அலைகளை உடைய கடல்நாடனே!

நாம் செய்த தீயசெயல்களை மலையானது வெளிக்காட்டாது மறைத்தது என்று நினைத்து தீயசெயல்களையுடைய அவர்கள் தாம் செய்யும் தம் தீய செயல்களினின்றும் தெளிதல் இலர்,

ஆனால், மனத்து நிகழ்ச்சியை முகத்தின் வாயிலாக மிகவும் கூர்மையாகக் கண்கள் அறிந்துகொள்ளலின் கண்கள் அம்பினும் கூர்மையுடையனவாம்.

கருத்து:

பிறரது உள்ள நிகழ்ச்சியை அறிவதற்குக் கண்களே சிறந்த கருவிகளாம்.

விளக்கம்:

தீயார் தாம் செய்த தீமை மறைக்கப்பட்டன என்று கருதினும், அவர் செய்த தீமையை அவர் முகமே கண்டு விளக்கிக் காட்டலின், அஃது எல்லோராலும் அறியப்படும் என்பதாம்.

கண்கள் முகத்தைக் கொண்டு அகத்தை மிகக் கூர்மையாக அறிதலின். 'கணையிலும் கூரிய கண்' என்றார்.

’கணையிலும் கூரியவாம் கண்’ என்பது இப்பாடலில் உள்ள பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-22, 11:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே