நீர்த்தன்று ஒருவர் கொண்டக்கால் பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே - பழமொழி நானூறு 195
இன்னிசை வெண்பா
நீர்த்தன்(று) ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்(கு) ஆயினும்
ஓர்த்த(து) இசைக்கும் பறை. 195
- பழமொழி நானூறு
பொருளுரை:
உடுக்கை நாம் நினைத்த ஓசையையே ஒலிக்கும்; அதுபோல, கூரிய நுட்பமான நூற்பொருளைக் கேட்டுணர்ந்த இயற்கையறிவு உடையவர்களுக்கே ஆனாலும், நீர்மையுடையது அன்று என்று அவருள் ஒருவர் முறை பிறழ்ந்து கருதிய இடத்து மீண்டும் அவரைத் தெளிவித்தல் தவத்தால் பெரியவர்களுக்கும் முடியாது. (அவர் கொண்ட கொள்கையிலேயே நிற்பர்)
கருத்து:
பிறர் ஐயுறாவண்ணம் ஒழுகுதல் வேண்டும்.
விளக்கம்:
அறிவுடையாரையே தெளிவித்தல் இயலாதெனின் அஃதில்லாரைத் தெளிவித்தல் இயலாது என்பது சொல்லாமலே அமையும்.
பறை நாம் நினைத்த ஓசையை ஒலிப்பதில் வழுவாதது போல, அறிவுடையாரும் கொண்ட கொள்கையினின்றும் சிறிதும் தெளியார்.
ஆகவே பிறர் ஐயுற்ற பின்னர் அவரைத் தெளிவித்தல் அரிதாகலான் ஐயுறா வண்ணம் ஒழுகுதல் வேண்டும்.
பெரியோர்க்கும் ஆகாது என்பது தெளிவித்தல் இயலாது என்பதை வலியுறுத்துவது.
'ஓர்த்தது இசைக்கும் பறை' -இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.