111 பெண்களும் தொழும் தெய்வம் பெருங்கற்பு உடையாள் - கணவன் மனைவியர் இயல்பு 3

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

தந்தைதாய் சோதரருற் றாரையெலாங் கைவிடுத்துத்
..தன்னைச் சார்ந்த
பைந்தொடியை அனையவர்போ லாதரிக்கக் கணவனுக்கே
..பரமாம் ஆதி
அந்தமிலான் முதற்றெய்வம் பதியிரண்டாந் தெய்வமென
..அன்பி னோடு
சிந்தைதனில் நினைந்துருகுஞ் சேயிழைபூ வைய'ர்க்'கெல்லாந்
..தெய்வ மாமால். 3

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்,
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை

பொருளுரை:

தந்தை தாய், சகோதரர்கள், உற்றார் எல்லோரையும் கைவிட்டுத் தன்னைச் சேர்ந்த, அழகிய ஆபரணங்களை அணிந்தவளை, தன் மனைவியை, கடவுள் போல நின்று காப்பதே கணவனுக்கு மேலானதாகும்.

முதலும் முடிவுமில்லாதவன் முதல் தெய்வம் என்றும், கணவன் இரண்டாம் தெய்வம் என்றும் அன்புடன் மனதில் நினைந்துருகும் சிறந்த அணிகளணிந்த பெண்கள், பெண்களுக்கெல்லாம் தெய்வமாவர்.

பைந்தொடி - அழகிய வளையலணிந்த பெண், சேயிழை - சிறந்த அணிகளணிந்த பெண், பூவையர்-பெண்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Nov-22, 10:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே