என் மகளே

வெறிச்சோடி கிடக்கிறது.....
நம் இல்லமும்
என் மனதும்.....
விதைகளின் சேமிப்பாய் உன் நினைவை
சேமித்துக் கொண்டேன்
என் கண்ணே.....
விடிந்ததும்
இமைகள் உன் முகம்
பார்த்தே கண் மலரும்....
அம்மா எங்கு இருக்கிறாய்
ஏன் தாமதம்....
பள்ளியை விட்டு வர மனமில்லையா
உன் தோழிகளோடு
கதை பேசினாயா.....
ஆயிரமாயிரம் வினாக்களால்
ஆய்ந்தெடுக்கும்
மதி முகத்தை தேடுகிறேன்....
என் ஆழ் மனதில்
உன் மழலை மொழியை
அப்படியே புதைத்து
வைத்திருக்கிறேன்.....
நீ அறையில்
தூங்குகிறாய் என நினைத்து
காபி போட எத்தனித்தேன்.....
அம்மு என அழைத்தபின்தான்
ஞாபகம் வந்தது
மணமாகி நீ சென்றது....
கருவறையிலும் மார்பிலும்
மனதிலும் சுமந்த உன்னை இதற்குள்
மறக்க முடியுமா சொல்.....
நீ உடுத்திய ஆடைகளை
தழுவிக் கொள்கிறேன்
உனையே தழுவுவதாக
எண்ணி என் மகளே.....