ஒரு சவரகாரனின் கவிதை மயிருகள்
(Tamil Nool / Book Vimarsanam)
ஒரு சவரகாரனின் கவிதை மயிருகள் விமர்சனம். Tamil Books Review
நூல் பெயர் : ஒரு சவரகாரனின் கவிதை மயிருகள்
ஆசிரியர் : இ.எம்.எஸ்.கலைவாணன்
வெளியீடு : அறம்
விலை : ₹ 75
மற்ற எல்லா கவிதை புத்தகங்களை போல் இல்லாமல் கம்பீரமான முறுக்கு மீசை மேல் நோக்கி நிற்பது போல் இருக்கிறது இந்த
” ஒரு சவரகாரனின் கவிதை மயிருகள் நூல் “.
சத்தியமா உங்களை பார்க்கணும், பேசணும்னு எவனும் சொல்லவே மாட்டான் ஏன்னா அப்படிப்பட்ட என்னுரை…
முதல் பக்கத்திலிருந்து கடைசி அட்டை வரை மீண்டும் மீண்டும் அறைந்து கொண்டே இருக்கிறார் கலை !
இந்த மனுசன் எழுத்து பாடாய் படுத்தியிருக்கும் படித்த அனைவரையும்…
இவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் எதிர் பதில் நாம் சொல்லவே முடியாது என்பது மட்டும் உண்மை !
இவரின் அடுத்த புத்தகம் இந்த புத்தகத்தின் எதிர்பார்ப்பை தாண்டி பூர்த்தி செய்ய வேண்டும் !
இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் ஒதுக்கப்பட்ட ஒரு சாராரின் சாடல்கள் !
புறக்கணிக்கப்பட்ட ஒரு இனத்தின் புலம்பல்கள் !
தாழ்த்தப்பட்ட ஒரு சாதி மக்களின் தார்மீக வெளிப்பாடுகள் !
இவர் பேனா பிடித்து எழுதவில்லை. கத்தரியும், கத்தியும் கொண்டு எழுதியவை ….
நிச்சயமாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் தான் இது !
வாழ்த்துகள் !
பிடித்த கவிதைகள் :
தொட்டிலில் கிடக்கும் என்னை சலூனில்
வேலை முடித்து வந்த அப்பா
முத்தமிட்ட கன்னப்பரப்பில் இரண்டு மூன்று வெள்ளை முடிகள் ஒட்டியிருக்கின்றன
எந்த ஜாதிக்காரனின்
அழுக்கு மயிரோ.
இராத்திரி அப்பா மிச்சம் வைத்த கஞ்சியை குடிக்க பசியோடு காத்திருப்பேன்
அதுல …
மிக்சர் பொடியும்
எவனுக்கோ வெட்டி தள்ளிய அஞ்சாறு முடிகளும் மிதக்கும் .