எண்ணம்
(Eluthu Ennam)
முருகனை வழிபடும் முறை
இறைவனை 'முருகன்' வடிவில் உணர்வதே 'கௌமாரம்'. இதனை அடிப்படையாகக் கொண்டு, முருகனை வழிபட்டுவந்தால் இறைவனின் தத்துவம் படிப்படியாக விளங்கும்.
எளிய முறையில் முருகனை வழிபடுவது எப்படி எனப் பலர் என்னைக் கேட்டுள்ளனர். என் அனுபவத்தில் நான் முருகனை-இறைவனை உணர்ந்துகொண்ட வழியை இங்கே தந்துள்ளேன். இதற்கான நேரம் சுமார் 15 நிமிடங்கள்.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இதனைச் செய்துவருவது நல்லது.
இதனை நேரம் பார்க்காமல், ஓய்வு கிடைக்கும்போது - எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
இதனை தொடங்குவதற்கு முன்னால் எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
(உதாரணம் - கைத்தொலைபேசி, இரைச்சல் தரும் கருவிகள் போன்றவை.)
1. உடலை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் - கை-கால்களையும் முகத்தையும் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்வது அவசியம்.
2. ஒரு முருக உருவப் படம் அல்லது முருக சிற்பம். இது இருக்கும் இடத்தில் வேறு உருவ(ங்கள்) இல்லாமல் இருப்பது உகந்தது.
3. உட்கார்ந்துகொள்ள இருக்கை - நாற்காலி. தரையில் அமரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
4. காலணி இல்லாமல், எளிமையான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.
5. கொஞ்சம் விபூதி.
கீழ்க்கண்ட பாடல்களைக் கேட்பது அல்லது இணைந்து பாடுவது சிறப்பு.
தயவுசெய்து இந்தப் பாடல் வரிசையில் (முறையில்) வேறு எந்த மாற்றமும் செய்யவேண்டாம் - இது முக்கியம்.
இங்கே இருக்கும் அனைத்துப் பாடல்களின் ஒலிவடிவங்களையும் இந்தப் பக்கத்தில் உள்ள ஒலிவடிவப் பகுதிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். சுமார் 9 நிமிட ஒலிவடிவம்.
வழிபடும் முறை
1. முருகனின் உருவத்தை சுமார் 20 வினாடிகள் பாருங்கள்.
2. இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, இதனை கற்பனை செய்யுங்கள்:
ஒரு மலர்ந்த தாமரைப் பூ. இது உங்கள் இதயத்தில் இருக்கிறது. அந்தப் பூவில் முருகனின் திருப்பாதங்கள். இவற்றில் சிலம்பு, சதங்கை, தண்டை போன்ற ஆபரணங்கள் உள்ளன.
(இதனை சுமார் 20 வினாடிகள் கற்பனை செய்யுங்கள்.)
சில முக்கிய விளக்கங்கள்:
இரு கைகளின் தத்துவம் - ஒரு கை பரமாத்மா-இறைவன். ஒரு கை நம் ஆன்மா-உயிர். இவை இணைந்திருப்பதே 'அத்வைத்தம்' - இதுதான் முருகன் தத்துவத்தின் குறிக்கோள். முருகனை வழிபடும்போது கைகளை தனித்தனியாக விரித்து வழிபடுவது தவறு.
பொதுவாக 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்று சொல்வதைத்தான் கேட்டிருக்கிறோம். எப்போது இறைவனை 'முருகன்' உருவில் நினைக்கின்றோமோ, 'வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா' என்று சொல்லலாம்.
முருகனுக்கான திருப்புகழ் பாடல்கள் - 6வது எண் பாடலான 'முத்தைத்தரு' என்று துவங்கும் பாடலிலிருந்து 1334 எண் பாடல் வரை.