ஆ!

பசும்புல்லை மேய்வதனால் என்னை நீங்கள்
பசுஎன்பீர்; என்பேரோ கார ணப்பேர்!
முசுகுந்தன் முன்னோனாம் மனுவின் மைந்தன்
முறைதவறித் தேரோட்டி என்னி னத்தின்
சிசுமாய்த்தான்; ஆராய்ச்சி மணிய டித்தேன்;
செவியுற்ற சோழன்ஓ டோடி வந்தான்;
பசுவாஆ ராய்ச்சிமணி யடித்த தென்று
பார்த்தே ‘ஆ’! என வியந்தான், “ஆ” ஆனேன்நான்!

பெண்பால் நான்! என்பாலை உண்டே நீங்கள்
பெரும்பாலும் உரங்காண்பீர்! நீங்கள் தாய்ப்பால்
உண்பதெலாம் ஒருபருவம்; ஆனால் என்பால்
உயிர்போகும் வரைபருகி வருவீர்! இந்தப்
பண்புணர்ந்தே குறளுக்கு ‘முப்பால்’ என்று
பழந்தமிழர் பெயரிட்டார். ஆனால் இன்று
பண்பாட்டில் மிகமட்டம் நீங்கள்; கன்று
பால், கூடக் குடிப்பதற்கு விடுகின் றீரா?


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:32 pm)
பார்வை : 40


பிரபல கவிஞர்கள்

மேலே