தோத்திரப் பாடல்கள் ஊழிக் கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட -- வெறும்
வெளியி லிரத்தக் களியோடு பூதம் பாடப் -- பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் -- களித்
தாடுங் காளீ, சாமுண்டீ; கங்காளீ!
அன்னை, அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை. 1

ஐந்துறுதம் சிந்திப் போயொன் றாகப் -- பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக -- அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் -- தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்,
அன்னை, அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை. 2

பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் -- சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய -- அங்கே
ஊழாம் பேய்தான் “ஓஹோ ஹோ” வென்றலைய, -- வெறித்
துறுமித் திரிவாய், செருவெங் கூத்தே புரிவாய்,
அன்னை, அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.
3

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் -- சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி -- அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் -- தானே
எரியுங் கோலங் கண்டேசாகும் காலம்
அன்னை, அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.
4


காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும் -- அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் -- கையைக்
கொஞ்சித் தொடுவாய், ஆனந்தக்கூத் திடுவாய்,
அன்னை, அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.
5


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:49 am)
பார்வை : 0


மேலே