குயிலுக்கு வாழ்வு கொடு

இறைவா! எனக்கின்னும்
பல்லாண்டுயிர் ஈந்தளிப்பாய்! - என்னை
மறையா திங்கு வைத்துத்
தமிழுக்கு வாழ்வளிப்பாய்! - கொடுஞ்
சிறையால் தமிழ்மாந்தர்
படுந்துயர் அறியாயோ? - அட
இறைவா! எனக்குயிர்
தந்தால் சிறை உடையாதோ?

நோயால் எனையுருக்கி
எலும்பாக மாற்றிவிட்டாய்! - இந்த
வாயால் ஓய்விலாது
குருதி வரவும் செய்தாய்! - உன்றன்
சேயாம் தமிழ்க்குலத்தின்
துயர் களைந்திட்ட பிள்ளை - இன்று
காயாய் இருக்கையிலே
வீழ்ந்து கருகவைப்பாயோ?

உன்னை வணங்கி நின்ற
பாரதியின் பின்னொருவன்- நின்தாள்
தன்னை வணங்குகின்றேன்
அவனைப்போல் பாதியிலே - பாவி
என்னையும் நீ பறித்தால்
தமிழ்ச்சாதி ஏங்கிப்போகும்!- என்றன்
அன்னை வீழ்ந்து துடிப்பாள்
நீ என்னை அழைக்கலாமோ?

உயிரை நீட்டி என்னை
முன்போல் உலவ விடுவாய்!- சூழும்
துயிலை நீக்கி வைப்பாய்!
புதிதோர் துணிவளிப்பாய்! - அஞ்சா
வயிரநெஞ்சில் ஒன்றும்
மலைத்தோளும் ஈந்தருள்வாய்! - இந்தக்
குயிலை வாழ வைப்பாய்!
தமிழ் கூவவேண்டும் ஐயா!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:38 pm)
பார்வை : 205


பிரபல கவிஞர்கள்

மேலே