நீர்நிலை

கரைவிரிந்த அந்த நீர்நிலை எப்பொழுதோ
தன்னை ஒரு கண்ணாடிப் பாளமாக்கிக் கொண்டது
தேக்கத்தையும் குழப்பத்தையும் துறந்த
நிசப்தமான ஓர் ஆடையை அணிந்து கொண்டது
அகண்ட வானத்தை அதன் சிறகு விரிக்கும் மேகங்களை
நட்சத்திர விழிகளை ஏன் காயும் நிலவைக் கூட
தன்னில் பிரதிபலித்தது தண்ணீராய் நிறைந்தது
ஒரு பருந்து அதன் மேலே பறந்து செல்கையில்
தன் வழியாகப் பறக்க இன்னொரு வானம் தந்தது
சூரியன் முன் தன் பொற்காசுகளை வெளிப்படுத்தினாலும்
எவராலும் களவு கொள்ள முடியாத பொற்கலமென
அது தன்னை ஆழம் ஆக்கிக் கொண்டது
அதன் மீது நீளும் மரங்களின் கிளைகளில்
ஊஞ்சல் ஆடும் பறவைகள் கால் நனைத்துக்கொள்கையிலும்
ஒரு கற்பனையான மீனை நகங்கொத்திப் போகையிலும்
சிரிப்பின் சிற்றலைகளால் நீர்நிலையை நிறைத்துக் கொள்கிறது
தன் அழகையே தான் பார்த்துக் கொள்ள
தன் அத்தனைக் கைகளாலும் தாமரைகளை உயரே நீட்டுகிறது
அக அழுக்குகளை இரையென தின்னும் மீன்களால்
அதன் அந்தரங்கம் நீரின் அரண்மனையாகிறது
தன் கரை வந்து சுமைகளை இறக்கி வைத்து
ஒரு சிரங்கை நீரள்ளிப் பருகப் போகும் பயணிக்காகத்
தன்னை எதனாலும் பழுது படுத்திக் கொள்ளாமல் காத்திருக்கிறது.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 6:47 pm)
பார்வை : 0


மேலே