கால முனிவன் குடில்

யானும் தானையும் மாமலை காடுகள்
யாவும் கடந்து நடை நடந்து
வானில் முகில்கள் அலைந்தன போலிந்த
வையத் திசைகள் அலைந்து வந்து
பேனும் அழுக்கும் பிடித்த தலையொடு
பிணத்தின் நிலையில் முகங்கறுத்து
மான உணர்வில் மறுபடியும் பல
மலைகள் வழியே நடைதொடர்ந்தோம்.

வீர மிருந்தும் வெறியிருந்தும் பகை
வெட்டி வீழ்த்தஓர் படையிருந்தும்
தூர நடந்தும் முழுக்கமிட்டும் மலைத்
தோள்களிரண்டும் துடிதுடித்தும்
போரை நடத்தி முடிக்க எமக்கொரு
பொழுது வரவில்லை... என்ன செய்வோம்?
ஆரை நினைத்தழுவோம்? கொடும் ஊழ்வினை
அதனை நினைத்துப் புலம்பி நின்றோம்!

விழிகள் இரண்டிலும் நீர் வடியும்! என்றன்
வெந்த மனத்தில் நெருப்பு வரும்!
மொழிகள் அழுவது போலவரும்! பெரு
மூச்சுக்கள் ஆயிரம் ஓடிவரும்!
இழிவு சுமந்த தமிழினத்தின் துயர்
எத்தனை காலம் பொறுத்திருப்போம்?
அழிவு வருமெனினும் பொறுப்போம்... இந்த
அலைச்சல் நிலைமை எவர் பொறுப்பார்?

தொடையை அடித்திட்டார்! பல்கடித்தார்! சிலர்
சோர்ந்து மரத்திலே சாய்ந்திருந்தார்!
படையில் அவ்வேளை ஒருவன் துடிப்பொடு
பக்கத்திருந்த நெடும்புதரின்
இடையில் விரற்குறி காட்டிநின்றான்! அந்த
இடத்தில் ஒரு குடில் கண்டுவிட்டோம்!
அடையத் துடித்தார் தமிழ்மறவர்... அட
அங்கோர் புதுவெறி வந்ததடா!

துள்ளி நடந்தன கால்கள்! குடிசையின்
தூய கதவம் அடைந்து விட்டோம்!
உள்ளம் சிலிர்க்க நிலை மறந்தோம்! குடில்
உடையானடிகள் வணங்கி நின்றோம்
கள்ளின் வெறிபடைத் தாடினோம்! இங்குள
கடவுளர் யாவர்? என மொழிந்தோம்!
வெள்ளைச் சிரிப்பொடு கால முனிவரன்
விழிகள் திருப்பி மொழிதலுற்றான்.


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:05 pm)
பார்வை : 38


மேலே