தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
ஆத்ம ஜயம்
ஆத்ம ஜயம்
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? - அட,
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? - அட,
விண்ணிலும் மண்ணிலும், கண்ணிலும் எண்ணிலு
மேவு பரா சக்தியே.
என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னைவென் றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்று முணர்ந்தபின்னும்
தன்னைவென் றாளும் திறமை பெறாதிங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?