காசி...! (முதல் பாகம்)

வீடுகளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது...வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கடையில் சாமான் வாங்கிக் கொடுப்பது என்பது தொடங்கி ஒவ்வொருவரின் அன்றாடத் தேவைகளுக்கு எல்லோரும் கூப்பிடும் பெயர் காசி. எப்பவும் மொட்டை அடித்து விடுவார் அதனால் பாதி வளர்ந்த நிலையிலேயே இருக்கும் அவரது தலை முடி பல சமயத்தில் அதுவே பெயராயும் போனதுண்டு. அரைக்கை வெள்ளை பனியனும் ஒரு மாதிரி பெண்கள் நொண்டி விளையாடும் போது அள்ளி சொருகிக் கொள்வது போல் கட்டப்பட ஒரு லுங்கியும் நெற்றி நிறைய பூசிய திருநீரும் காசி அண்ணனின் அடையாளங்கள்....!

டேய்.. காசி...! ஏய்....லூசு....! காசிண்ணே....! எலேய்..கிறுக்கு..மொட்டண்ணே.....இது அவ்வப்போது மக்கள் தங்களின் வசதிக்கேற்ப கூப்பிடும் பெயர்கள். வேலை செய்யாமல் காசு வாங்க மாட்டார். அதிகம் பேசுவதுமில்லை... ரோட்டில் போகும் காசி அண்ணனை அலுவலகத்தில் பணி செய்பவர்கள் முதல் தெருவில் குப்பைக் கூட்டும் தொழிலாளி வரை எல்லோரும் கிண்டல் செய்யும் போது அப்படி...அவரின் சீற்றமும் கோபமும் கடுமையாய் இருக்கும்...யாரையும் திரும்பிக் கூட பார்க்காத காசி அண்ணனை ஏன் இவர்கள் வம்பிக்கிழுக்க வேண்டும் என்று எனக்கு புரிவதில்லை ஆனால் வெறுமனே அவரின் சீற்றத்தை ரசிக்கவே ஒரு கூட்டமிருந்தது என்னவோ உணமை

எதேச்சையாய் அம்மாவிடம் கேட்டேன்...ஏம்மா காசி அண்ணன எல்லோரும் இப்படி பண்றாங்க...அவருக்கு எத்தனை வயசு ஆகுது ஏன் இப்படி எல்லோரும் அவரை கிண்டல் பண்றாங்க.. என்று கேட்டேன். " தம்பி அவனுக்கு 35 வயது ஆகுது என்று அம்மா சொல்லத் தொடங்கி நான் கேட்க ஆரம்பிக்கும் போது எனக்கு வயது 17.

காசி அண்ணன் நல்லாதான் இருந்துச்சாம் ஒரு ஆறு ஏழு வருசமாத்தான் இப்படி ஆயிடுச்சாம். அம்மா அப்பா தம்பி என்று எல்லோரும் இருந்தாலும் காசி அண்ணன் படுப்பது பிள்ளையார் கோவில் மரத்தடியில், வேலை செய்யும் வீட்டில் சாப்பிடுவார் ஆனால் பெரும்பாலும் அவர் சாப்பிடுவதை யாரும் பார்த்ததில்லை. உறவுகள் எல்லாம் பைத்தியம் என்று சொல்லி இவரிடம் பேசுவது இல்லையாம்..அதனாலேயே இவர் வீடு விட்டு வெளியே வந்து விட்டதாக அம்மா சொன்னதை விட மேற்கொண்டு தொடர்ந்து சொன்னதுதான் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது....

"அவன் அதிகமா படிச்சுட்டாண்டா....அதான் பைத்தியம் ஆகிட்டான்"

ஏறத்தாழ அந்த சொற்றொடர் என்னை குழப்பியது. அதிகம் படித்தால் அவன் அறிவாளி அல்லவா? அவன் எப்படி பைத்தியம் ஆக முடியும்? அப்புறம் ஏன் +2 பரிட்சைக்கு என்னை படி படி என்று கொல்லவேண்டும்.. ட்யூசன் நான் ஏன் படிக்க வேண்டும்....? எனக்குள் முரண்பட்டது... கேள்வியாய் மீண்டும் அம்மாவிடம் போய் விழுந்தது. ஆமாடா என்னமோ கிரந்தகமாம் அதுல ஏதேதோ படிச்சு இருக்கான் கடைசில லூசா போய்ட்டான்...அவ்ளோதான் தெரியும் என்று சொல்லிவிட்டு அடுப்பில் இருந்த சாம்பாரைப் பார்க்க அம்மா போய்ட்டாங்க.

கிரந்தம்.....என்பது ஒரு எழுத்துமுறை அது வடமொழியினையும் சமஸ்கிருதத்தையும் எழுத பயன்பட்டது என்பது பிற்பாடு எனக்கு தெரியவந்தது ஆனால் அந்த +2 படித்த 17 வயது அறிவுக்கு அது தெரியாது. கேள்விகளால் நிரம்பி வழிந்த காலம். அதிகம் படித்த ஒரு மனிதன் ஏன் இப்படி ஒரு உடை.. இப்படி ஒரு நடை... ஊராரின் கிண்டல் என்று வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். மாமா, சித்தப்பா, சொந்தம் , பந்தம், ஊர்க்காரர்க்ள் எல்லோருக்கும் காசி அண்ணன் பைத்தியம். வீட்டு வேலை செய்யும் ஒரு அஃறிணை.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் பஜனை செய்து முடித்து பிள்ளையார் கோவிலில் பொங்க சோறு கொடுப்பார்கள். பஜனைக்குப் போ என்று அம்மா வற்புறுத்தினாலும் பொங்கச் சோறு கிடைக்கும் அப்புறம் காலையிலேயே சில நண்பர்களை பார்த்து அரட்டை கச்சேரி நடத்தலாம்... ஒரு வேளை பக்கத்து தெரு பார்வதி கூட வரலாம் என்ற நப்பாசையில் ஞாயிற்றுக் கிழமைகளில் நானும் செல்வேன். பஜனைக்கு முன்...பிள்ளையார் கோவிலுக்கு பின் இருக்கும் குளக்கரையில் அமர்ந்து பேசிவிட்டு பின் கோவிலுக்குள் செல்வோம்.

ஒரு நாள் நான் தாமதமாய் வந்து விட்டேன்... கோவிலுக்குள் போவதற்கு முன் அந்த மார்கழி மாத அதிகாலை இருட்டில் கோவிலுக்குப் பின் சென்று நண்பர்கள் யாராவது இருப்பார்களா என்று தேடிக்கொண்டு கொண்டு குளக்கரையின் கீழே இறங்கி மறுபடியும் வேறு வழியே ஏறிய போது..

அரசமரத் திண்டில் யாரோ அமர்ந்து இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டேன்... மெல்ல கிட்ட நெருங்கினேன்...என் இதயத்தின் லப் டப் அதிகமானது...ஓ.. சட்டையணியாமல்... ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டு.... பத்மாசானத்தில்(அது பத்மாசனம் என்று பின்னாளில் அறிந்தேன்) கைகளை விரித்தபடி அமர்ந்திருப்பது யார்....? என்று பார்த்தபடி.. கிட்ட நெருங்கினேன்.....கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு....

"காசி அண்ணன்......"

கண்களை மூடியபடி....அமர்ந்திருந்தார்.....!

அட செம லூசுதாண்டா... ! இந்தக் குளிர்ல சட்டை போடாம பஜனைக்கும் போகாம கண்ண மூடிட்டு உக்காந்துகிட்டு... எனக்கு சிரிப்பு வந்தது.....! காசி அண்னன் திருநீறுதான் பூசுமே தவிர ஒரு நாள் கூட சாமி கும்பிட்டோ கோவிலுக்குள்ள போயோ பாத்ததுல்ல....ஊர்க்காரய்ங்க சொல்றது சரிதான்னு பட்டுச்சு....சரி நாம கோவிலுக்குள்ள போவோம்...பொங்கசோறும் பார்வதியும் இருப்பாங்கன்னு நினைச்சு கிட்டு கிளம்ப நினைச்சேன்....அந்த நேரத்தில் காசி அண்ணன் கண்ண முழிச்சு என்ன பாக்குறத பாத்துட்டேன்.....

அண்ணே.....என்றேன். .......................................யாரு மாரநாட்டர் ஐயா பேரனா? குடும்ப பேர் சொல்லி கேட்டுச்சு! கூத அடிக்கிதாண்ணே.. பேச வார்த்தையில்லாமல் நான் ஏதோ உளறினேன். ஆமாப்பு..இங்கிட்டு இருங்க....என்று சொல்லி சுட்டிக்காட்டிய இடத்தில் பேசாமல் போய் அமர்ந்தேன். ஏண்ணே சாமி கும்பிட வரலையான்னு மெதுவா கேட்டேன்....!

அங்கதான் சாமி இருக்குன்னு உனக்கு தெரியுமா...? காசி அண்ணன் கோவிலைக் சுட்டிக் காட்டி என்னைக் கேட்டார். யாரோ சொல்றதை எல்லாம் நம்பாத...உண்மையில் சொன்னா இவுக சாமின்னு சொல்லி கும்புடுறது எல்லாம் சாமியே இல்ல...என்று எனக்குள் வெடிகுண்டை வீசினார். நான் அமைதியாய் அவரைப் பார்த்தேன்....அப்ப சாமி இல்லையாண்ணே? மெதுவாய் கேட்டேன். சாமி எதுக்கு இருக்கணும்? எதிர் கேள்வி கேட்டார். அட இது என்னடா விவகாரமா போச்சே....பொங்கலும் போச்சு...பார்வதியும் போச்சு...அரட்டையும் போச்சும் இப்படி வந்து மாட்டிகிட்டமேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.....

காசி அண்ணன்....அதட்டினார்....சாமி எதுக்கு இருக்கணும் சொல்லு....? நான் பயத்தில் எச்சில் முழுங்கத்தொடங்கினேன்......

* * *
தொடரும்...

எழுதியவர் : Dheva.S (4-Apr-13, 9:09 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 130

மேலே