கருத்தப் பாண்டி (தொடர் )-பகுதி-38

38

@@@@@@@@@@@@@@@@@@@@@@

“சாரே... நான் பொழப்புக்குத்தான் இந்த ஊர் வந்தேன். அன்னையில் இருந்து இந்த நிமிஷம் வரை நான் ஓர் அசலூர்க்காரன் என்று வித்தியாசமும், வேறுபடுத்தியும் பார்க்காத நீங்கள் எல்லாம் ஒரு காரணம். பின்னே, நாங்க நாலுபேரும் என் ஒரு மருமகளும் மூன்று வேளை சாப்பிடணும், உடுத்தணும், கடை வாடகை கொடுக்கணும், அவசர மருத்துவச் செலவுக்கும், வருஷம் ஒரு முறை குருவாயூர் போய் வரணும் அவ்வளவுதான். எங்களுக்குச் செலவு. இதற்கு வருமானம் வந்தாப் போறும் சாரே. பொருள் நிறையா சேர்த்துக்கிட்டா தொல்லைதான் சாரே”

@@@@@@@@@@@@@@@@@

நிறைய தொழிலாளிகள் மதிய உணவுக்காக வந்திருந்தனர். அளவுச் சாப்பாடே அந்த பாலக்காட்டு நாயர் பத்து ரூபாக்குத்தான் போடுவார். உணவகம் ஒரு பெரிய தேவாலயத்தின் பக்க வட்டில் உள்ளது சிறிது தூரத்தில் அரசாங்க மருத்துவமனை மற்றும் இரண்டு மூன்று பெரிய தொழிற்சாலைகளும் இருந்தன.

அந்த உணவகம் மலிவான உணவிற்காக மட்டுமல்லாமல் அன்பான அவரது வியாபர தந்திரம் இல்லாத மனுஷத் தன்மையும்தான் பலரையும கவ்வி இழுத்து வசப்படுத்தி வைத்திருக்கக் காரணம். அவரும் அவரின் இரண்டு பிள்ளைகளும் ஒரு சிறுவனும் பரிமாறுவார்கள். சோறு அளவு பார்க்க மாட்டார்கள். வேண்டும் என்பவர்களுக்கு நிறைய போடுவார்கள் அளவுச்சாப்பாடு என்றுச் சொல்லிக் கொண்டு இப்படி நிறைய போடுகிறீர்களே என்றுக்கேட்டதற்கு ஒருமுறை அவர் சொன்னார்.

“சாரே... நான் பொழப்புக்குத்தான் இந்த ஊர் வந்தேன். அன்னையில் இருந்து இந்த நிமிஷம் வரை நான் ஓர் அசலூர்க்காரன் என்று வித்தியாசமும், வேறுபடுத்தியும் பார்க்காத நீங்கள் எல்லாம் ஒரு காரணம். பின்னே, நாங்க நாலுபேரும் என் ஒரு மருமகளும் மூன்று வேளை சாப்பிடணும், நல்லா உடுத்தணும், கடை வாடகை கொடுக்கணும், அவசர மருத்துவச் செலவுக்கும், வருஷம் ஒரு முறை குருவாயூர் போய் வரணும் அவ்வளவுதான். எங்களுக்குச் செலவு. இதற்கு வருமானம் வந்தாப் போறும் சாரே. பொருள் நிறையா சேர்த்துக்கிட்டா தொல்லைதான் சாரே”

அன்று முருங்கைக்காய் சாம்பாரும், உருளைக்கிழங்குப் பொரியலும், பப்படமும் போட்டார். நல்ல ருசியாகத்தான் இருந்தது.

சாப்பிட்டு முடித்து கல்லாவில் பணம் கொடுத்து திரும்ப எத்தனிக்கையில் “சாரே... உங்க ரண்டு பேருக்கும் காசு ஏற்கனவே வந்துடுச்சே... ஆனா நான் வாங்கல்ல. இதோ அப்படி இருக்க” என்றார் நாயர்.

அதிர்ச்சியுடன் “நமக்கு யார் கொடுத்திருப்பாங்க, சங்கர்” என்றார் கண்காணிப்பாளர்.

“தெரியலை சார். நாயரே யாரு கொடுத்தது”

“நான் தான் சார் கொடுத்தேன். கொடுக்கப்படாதா?” என்றார் ஞானசேகரன்.

“சாரி சார், நீங்க எப்படி கொடுக்கமுடியும்? ஏன்?”

“சார் நாமெல்லாம் ஒரு டீம் சார். நான்தான் ஞானசேகரன் வெங்கடவரதனின் உதவியாளர். அப்போ உங்களுக்கும் அப்படித்தானே! நாயரே ஒரு பத்து பக்கோடா பொட்டலம் பார்சல் கட்டுங்க”
நாயர் பார்சல் பண்ணி கொடுத்த பொட்டலங்களை வாங்கிக் கொண்ட ஞானசேகரன் அருகில் இருந்த ஒரு தொழிலாளியைப் பார்த்து “கண்ணா... வேண்டாம்னு சொன்னேன். நீ கேக்கலை. அப்புறம் வருத்தப் படுவே... சரி நீயே பணம் கொடுத்துடு. ஆமா நீ எந்த பிராஞ்சுக்குப் போகணும்னு சொன்னே... சாயரட்சை ஆபீஸ் பக்கம் வாயேன். முடிச்சுடுவோம். தோ... சாரெல்லாம் இருக்காங்க”

“மிஸ்டர் ஞானசேகரன் இந்தாங்க... உங்க வேலை எல்லாம் எங்ககிட்ட வேண்டாம். இந்தாங்க நீங்க கொடுத்த காசு. இனிமே இந்த மாதிரி வேலை வைச்சுக்காதீங்க. இதுவே கடைசி தரமா இருக்கட்டும். ஜாக்கிரதை “என்றார் கண்காணிப்பாளர் உக்கிரமாக.”

“கண்ணா, சார் எப்போதும் இப்படித்தான் விளையாட்டா பேசுவார். நீ மனசுலேவைச்சுக்காத. நீ சாயரட்சை வா. ஹாங் மறந்துட்டன் பார்... நம்ப மேலதிகாரி வீட்டு மாடியிலே ஒரு ரூம் போடறார். கொஞ்சம் பலகையெலாம் கதவுக்கு வாங்க வேண்டும்னு சொல்லிக்கிட்டு இருந்தார். உன்னோட தோப்பிலே பூவரசுமரம் இருக்கோ. இருந்தா... இதைப்பத்தியும் பேசிடுவோம்” என்றுச் சொன்ன ஞானசேகரன், கண்காணிப்பாளர் வார்த்தைக்குப் பதில் வார்த்தை பேசாமல் வெளியேறினான். “சே... என்ன ஜன்மம் இவன் இவனும், மேலதிகாரியும் சேர்ந்தா நாம என்னவாகுறது” என்று நினைத்த கண்காணிப்பாளர் குனிந்து தன் பர்ஸில் இருந்த காசு எடுத்துக் கொடுத்து விட்டு தலை நிமிர்ந்த போது சங்கர் அங்கு இல்லை.

காண்டீனுக்கு வெளியே ஏதோ சப்தம் கேட்டது.

ஒரு தொழிலாளி உள்ளே வந்து கண்காணிப்பாளரிடம் “சார் அங்கே ஞானசேகரனுக்கும், சங்கரலிங்கத்திற்கும் அடிதடியே நடந்திடும் போல இருக்கு. வாங்க சார்” என்றார் பதைப்புடன். ஞானசேகரன் தலைமுடி கசங்கி இருந்தது.

“வெட்டிப்புடுவேன் தாயோளி, என்னலே நெனப்பு உனக்கு. யாருன்னு நெனச்சே என்னை நீ. வகுந்துடுவேன் வகுந்து. உன்னோட எச்சில் புத்தியை எங்ககிட்ட காட்டாதே. சொலுலே... போய் உங்க வெங்கடவரதன் கிட்ட... எந்தப் பயலாலும், எப்பவும் என்னை விலைக்கு வாங்க முடியாது” கத்தியபடி ஞானசேகரனின் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு இருந்த சங்கரலிங்கத்தை கண்காணிப்பாளர் அதட்டினார்.

“சங்கர்... என்ன இத விடுப்பா... விடு.. இது ரொம்ப அநாகரீகம்”

சங்கரலிங்கம் கையை எடுத்தான் ஞானசேகரனின் சட்டையில் ரெண்டு பொத்தான்கள் அறுந்து கீழே விழ்ந்து!

“சங்கரலிங்கம்... நாலு பேர் எதிரில் நீ என்னை அடிச்சு அவமானப்படுத்திட்ட என் உடம்பு தான் லேசா இப்ப வலிக்குது... ஆனா நான் உன்னை உன் ஆயுசுப்பூரா மனசிலே அடிச்சு வலி உண்டாக்கி நீ எந்தபாக்டரிக்குப் போனாலும் பாக்டரி தொழிலாளிகள் உன்னை அவமானப்படுத்திற மாதிரி செய்ய முடியும். ஆனா உன்னை மாதிரி கையால அடிக்க மாட்டேன். மூளையால - புத்தியாலே! பாவம் நீ சின்ன பையன். உலகம் தெரியாதவன். அதான் பார்க்குறேன்” என்று சொல்லி எதுவுமே நடக்காத மாதிரி போனான் ஞானசேகரன்.

“உண்மையிலேயே சங்கரலிங்கம் இப்படி நடப்பேன்னு, கோபத்தின் உச்சிக்குப் போவேன்னு நான் நினைக்கல. பாரு இப்ப ஒரு பகைமையைத் தேடிக்கிட்டோம் – நமக்கே தெரிஞ்சு. இவன் கண்டிப்பா எதுவும் செய்யாம் இருக்க மாட்டான். ஆனாலும் நீ இப்படி கோபப்பட்டிருக்க வேண்டாம்” என்றார் கண்காணிப்பாளர் சங்கரலிங்கத்தை அழைத்துக் கொண்டே மெள்ள நடந்தார்.

சங்கரலிங்கம் பேசினான், “சார் நான் எப்படிப்பட்டவன், என் பின்ணனி என்னன்ன இங்க நெறையப் பேருக்குத் தெரியாது. அநியாயத்தை, அக்கிரமத்தை அழிக்கணும் – அழிச்சே தீரணும் என்ற வெறியிலே வளர்ந்தவன் சார். நான் அப்படியே இருந்து இருக்கலாம். கொஞ்சம் படிக்க வைச்சு இப்படி என்னை மாத்திட்டாங்க சார்... பழைய சங்கரலிங்கமா இருந்திருந்தா இந்நேரம் இவனை குழிநிரப்பிக் கொன்னு போட்டு இருப்பேன்'

“குழி நிரப்பி கொன்னு போட்டு இருப்பியா... அப்படின்னா...”சந்தேகத்துடன் கேட்டார் கண்காணிப்பாளர்.

“ஆமா சார்” என்ற சங்கரலிங்கம் தன்னைப் பற்றி முழுமையாக, முதன் முதலாக வெளி ஆள் ஒருவரிடம் சொன்னான். இரண்டு போலீஸ் காரர்களின் உயிர் எரிப்பு கண்காணிப்பாளருக்கு சங்கரலிங்கத்தின் அமல் ஒருவித பயத்தை உண்டு பண்ணியது.

“அப்புறம் எப்படி தியாகராஜன்ன சாரோட நீ வளர்க்கப்பட்டது.. இந்த வேலைக்கு...” என்று வினவினார் கண்காணிப்பாளர்.

“தியாகராஜன் அய்யா... ரொம்ப நேர்மையானவர். தவிர நான் முதல்லேபாக்டரிக்குத்தான் போனேன். அப்புறம் அவர் என்னை படிக்கச் சொல்லி தூண்டிவிட்டு ஒருபடிப்பாளியாக்கிப் போட்டுட்டாரு. நான் படிப்பாளியானதால என் வீரம் மழுங்கிப் போச்சு, தீமைக்கு எதிரான உணர்ச்சியும், ஆவேசமும் மங்கிப் போச்சு ஆனா என் உள்ளே இன்னும் அந்தத் தீ அணையாம ஆடிக்கிட்டே கிடக்கு. முழுமையான அந்தத் தீயை ஒருமுறையாவது பயன்படுத்தி அநியாயத்தைப் பொசுக்கிட்டு நானும் அழியணும். இல்லேன்னா அந்தத் தீ என்னையே கொஞ்ச கொஞ்சமா அழிச்சுடும் சார்” என்ற சங்கரலிங்கத்தை ஆதரவாக, தட்டிக் கொடுத்தார் கண்காணிப்பாளர்.

அலுவலகத்திற்குள் வந்து அமர்ந்தனர் இருவரும். சங்கரலிங்கத்தைப் பார்க்க ஒரு தொழிலாளி வந்து ரொம்ப நேரமாக காத்துக் கிடப்பதாக பியூன் சொன்னார். “போய் துணையதிகாரிய பார்க்கச் சொல்” என்றார் கண்காணிப்பாளர். இல்லை சார்... ரொம்ப முக்கியமாம். பேக்டரி சம்பந்தப்பட்டது இல்லையாம்... நம்ப சங்கர் சார் சம்பந்தப்பட்டதாம்... ரொம்ப அவரசம்ன்னு சொல்லச் சொன்னார். இதோ வந்துட்டாரு” என்ற பியூன் சட்டென்று “இதோ கண்காணிப்பாளரைப் பாருங்க சார்” என்று சொல்லி போனார்.

“சார் நான் பாக்டீரியிலே வேலை பார்க்குறேன். சங்கரலிங்கத்தை எனக்கு நல்லாவே தொரியும். நேற்று இரவு டவுன்லே இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துட்டு ப்ளூ ஸ்டார் ஓட்டலிலே நண்பர்களோடு கொஞ்சம் சாப்பிட போய் இருந்தேன். அப்போ என் டேபிளுக்கு அந்தப்பக்கம் மூணு பேர் மது அருந்திக்கிட்டு இருந்தாங்க. அவங்க மது அருந்தத் தொடங்கின சமயம் அதில் ஒரு நாள் நம்ப யூனியன் லீடர் பேர்... சாமி!”
இதொன்ன இந்த ஆள் கதை விடுகிறார் என்றெண்ணி சந்தேகத்துடன் பார்த்து பின் வெறுப்புடன் வெளியேச் செல்ல எத்த்னித்த சங்கரலிங்கத்தை கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தினார்.

தொழிலாளி தொடர்ந்தார். “சார் அங்கே சாமிக்கு மற்ற இரண்டு பேருக்கும் நடந்த உரையாடலை அப்படியே சொல்றேன் கேளுங்கசார்”

சாமி: ஏம்பா... அந்த சங்கரலிங்கம் கேஸ் என்னவாச்சு!

ஆள் 1: என்னவாச்சா? ஒண்ணும் ஆகலை. அந்த ஆள் ரொம்ப சுத்தம்பா... ஒண்ணும் புரூவ் ஆகலை.

சாமி: ஹாங்... அப்படியா... யாருமே ஸ்டேட்மெண்ட் அவனுக்கு எதிராகொடுக்கல்ல

ஆள் 1: இல்லப்பா, உண்மையிலேயே அவன் ரொம்ப நல்லவன்ப்பா

சாமி : ஏய்... ஏய்... இருப்பா... நான் நாளைக்கே ஒரு ஐந்து சாட்சிகளை அனுப்புகிறேன். அவங்களெல்லாம் சங்கரலிங்கத்திற்கு எதிரா ஸ்டேட்மெண்ட் கொடுப்பாங்க. நான் சொல்லி அனுப்பறேன். எல்லாம் நம்ப ஆட்கள்தான். எழுதி வாங்கிகிட்டு அவனை ஒழிச்சுடுப்பா.

ஆள் 1 : ஏய்... வேலையைப் பாருப்பா... மொதல்ல உன்னைத்தான் நான் கேட்டேன். சங்கரலிங்கம் எப்படின்னு. அப்போ நல்லா சொல்லிட்டு இப்போவேற மாதிரி சொல்றே...

சாமி : ஆமான்யா... இப்ப அவனுக்கு கொஞ்சம் தில்லு கூடிப் போயிட்டது. பாக்டரி தொழிலாளி என்கிறதை மறந்துட்டு அலுவலக ஆபிசர் கணக்கா நடக்குறானாம். தவிர எனக்கும் ‘பெப்பே’ காட்டுறான். ஒரு செய்தி வெளியே மூச்சு விட மாட்டுறான். அதான் அவனை ஒழிச்சிட்டு “சர்வலயன்ஸ்” லவைச்சடு

சார்... நான் சொல்றது பொய் இல்லே... சத்தியம் தான். சாமியும் எனக்கு எதிரி இல்ல. சங்கரலிங்கமும் நண்பன் இல்ல. இட்டுக்கட்டி கதைச் சொல்ல. ஆனா சங்கரலிங்கத்தின் உழைப்பை நான் நேரடியா அனுபவிச்சு இருக்கிறேன். சங்கரலிங்கம் அலுவலகம் வந்தப்பிறகு தான் எனக்கும் கிட்டத்தட்ட ஒரு 200 தொழிலாளிகளுக்கும் எத்தனையோ வருடங்களாக கொடுக்கப்படாதிருந்த பதவி உயர்வு, பதவி உறுதியாக்கம், இன்க்ரிமெண்ட் எல்லாம் கிடைச்சது. சங்கப் பயலுக கமிஷன் அடிக்க முடியாதபடி அது அது கரெக்டா அந்த அந்த நேரத்ல நடந்தது. நான் வர்றேன் சார்”தொழிலாளி போனார்.

சங்கரலிங்கம் அமைதியில் ஆழ்ந்துப் போனான்.
கண்களில் லேசாக கண்ணீர் திவலைகள்.

“அழறியா சங்கர்”

“இல்லே சார்”

“பின்னே கண்களில் கண்ணீர்”

“என் விதியை நெனச்சேன். இந்த தொழிலாளி வர்க்கத்தை நெனைச்சேன். ஒரு கண்ணிலே ஆனந்தமா நீர் இன்னொரு கண்ணிலே அவமானமா நீர்”

“வெவ்வேறு விதமா இரண்டு கண்களில் எப்படி முடியும் சங்கர்”

“மனிதர்களில் சாமியைப் போலவும் இதோ வந்துப் போற தொழிலாளி மாதிரியும் இருக்கும்போது, மனித உறுப்புக்களில் ஒன்றுதானே சார் கண்”

இண்டர்காம் ஒலித்தது.

கண்காணிப்பாளர் பேசி வைத்தார்.

“என்ன சார் எதுவும் செய்தியா?”

“ஆமா சங்கர். நிர்வாகக்குழு உறுப்பினர் உடனே நம்ப ரெண்டுபேரையும் அவரது வீட்டிலே சந்திக்கச் சொல்லி செய்தி அனுப்பி இருக்கிறாராம்”

“துணையதிகாரிக்கு இது தெரியுமா சார்?”

“தெரியும் அவரும் நம்மோட வருகிறாராம் வா போவோம். இருவரும் கிளம்பினார்கள்.

இது மேலதிகாரியும், ஞானசேகரனும் சேர்ந்து செய்த வேலை என்பது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

கிளம்பின வண்டிக்குள் இருந்த சங்கரலிங்கத்திடம் பியூன் ராமையா ஒரு கவரைக் கொடுத்து, “சார் உனக்குப் பயன்படும் வைச்சுக்க” என்றார். கவரைப் பிரித்தால் உள்ளே டைப் அடிக்கப்பட்ட வாசகங்களோடு ஒரு புதிய கார்பன் பேப்பர் இருந்தது.

போகும்போதே சங்கரலிங்கம் லேசாய் முகத்தைச் சுளிப்பதையும், ஏதோ அவதிப்படுவதையும் கவனித்தார் கண்காணிப்பாளர்.

“என்ன சங்கர்... ஒரு மாதிரியா இருக்க”

“ஒண்ணுமில்லே சார்” லேசாய் நெஞ்சு வலிப்பது போல் இருந்ததை சொல்லவில்லை, சங்கரலிங்கம்.

வண்டி போய்க் கொண்டு இருந்தது.

கருத்தைப் பாண்டி வருவான் மீண்டும்..

எழுதியவர் : புதுவை காயத்திரி (எ )அகன் (5-Apr-13, 8:56 pm)
பார்வை : 82

மேலே