கற்பு - பகுதி - 2 - - -

கற்பு என்பதற்கு பதிவிரதம் என்று எழுதிவிட்டதின் பலனாலும், பெண்களை விட ஆண்கள் உடல் வலிமை கொண்டவர்கலானதிலும் பெண்கள் அடிமையாவதற்கும் புருஷர்கள் மூர்க்கர்களாகி கற்பு என்பது தாங்களுக்கு இல்லையென்று நினைப்பதாலும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.
தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணமல் மறைக்கப்பட்டு கிடப்பதற்கும் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.
இந்த விசயத்தில் உலகத்தில் இன்ன நாடோ, இன்ன மதமோ, இன்ன சமூகமோ யோக்கியமாய் நடந்துகொண்டிருப்பதாக சொல்ல முடியாது,
உதாரணமாக ஐரோப்பிய தேசத்திலும் பெண்களுக்கு பலவித சுதந்திரங்கள் இருப்பதுபோல் காணப்பட்டாலும், புருஷன் பெண்சாதி என்பதற்காக ஏற்பட்ட பதங்களிலேயே உயர்வு தாழ்வு கருத்துக்கள் நுழைக்கப்பட்டிருப்பதுடன் சட்டங்களும் புருஷர்களுக்கு அடங்கி நடக்க வேண்டியதாகவே ஏற்பட்டிருக்கிறது.
துருக்கி நாட்டிலும், இஸ்லாமிய சமூகத்திலும் படுதா, கோஷா என்றும் அதாவது பெண்கள் அறைக்குள்ளேயே இருக்க வேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கையும், புருஷன் பல பெண்களை மணக்கலாம், ஆனால் பெண்கள் ஏக காலத்தில் ஒரு புருஷனுக்கு மேல் கட்டிகொண்டு வாழக்கூடாது என்ற கொள்கையும், நம் நாட்டில் ஒருதடவை புருஷன் பெண்சாதி என்கிற சொந்தம் ஏற்பட்டுவிட்டால் அந்த பெண்ணுக்கு சாகும்வரைக்கும் வேறு எவ்வித சுதந்திரமும் இல்லையென்றும், புருஷன் பல பெண்களை கட்டிகொண்டு அப்பெண்ணின் முன்பாகவே ஒவ்வொரு பெண்ணுடனும் கூடி வாழலாம் என்றும், புருடன் தான் கொண்ட பெண்ணை தன்னுடன் இருத்தி வாழவிடாமலும் கூட புருடனை சாப்பாட்டிற்கு மாத்திரம் கேட்கலாமே யொழிய இன்பதிற்கோ, காதலுக்கோ கட்டுபடுத்த உரிமை இல்லை என்றும் கட்டுப்பாடு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலை சட்டத்தாலும், மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதற்கில்லாமல் சமூகமும் ஒப்புகொண்டு இந்நிலைக்கு ஸ்திரீ புரிந்து வருவதாலும் இது ஒரு உறம் பெற்று வருகிறதென்றே சொல்ல வேண்டும்.
அனேக வருட பழக்கவழக்கங்களால் தாழ்ந்த சாதியர் எனப் பாடுவோர் எப்படி தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்று ஒப்புகொண்டு தாமாகவே கீழ்ப்படியவும், ஒதுங்கவும், விலகவும் முந்துகிறார்களோ அதுபோலவே பெண்மக்களும் தாங்கள் ஆண்மக்களின் சொத்துக்கள் என்றும், ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாககூடாதவர்கள் என்றும் நினைத்துகொண்டு தங்கள் சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள்.
உண்மையான பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்பிற்க்கொரு நீதி வழங்கும் நிர்பந்த கற்புமுறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சை கற்புமுறை ஏற்பட வேண்டும், கற்புக்காக காதலற்ற இடத்தைக் கட்டி அழுதுகொண்டு இருக்கும்படியான நிர்பந்த கல்யாணங்கள் ஒழியே வேண்டும்.
கற்புக்காக புருடனின் மிருகச் செயலை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமை ஒழியே வேண்டும்.
கற்புக்காக மனதுள் தோன்றும் உண்மைக்காதலை மறைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்கின்ற கொடுமை ஒழிய வேண்டும்.
எனவே இன்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிறவியில் உண்மைக் கற்பை, இயற்க்கை கற்பை காணலாமே யொழிய, நிர்பந்தங்களாலும், ஒரு பிறப்பிற்கு ஒரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காண முடியாததுடன் அடிமைக் கற்பைத்தான் காணலாம், அன்றியும் இம்மாதிரியான கொடுமையை விட வெறுக்கத்தக்க காரியம் உலகத்தில் மனித சமூகத்தில் வேறு ஒன்று இருப்பதாக நான் சொல்ல முடியாது.
**************
08 - 01 - 1928
குடி அரசு பத்திரிகையில்
தந்தை பெரியார் எழுதியது.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்- தொகுதி -6.
நன்றி
குடி அரசு.