மகாத்மாவுக்கு ஒரு பதில் (டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்)- பகுதி-1

மகாத்மாவுக்கு ஒரு பதில்.
**************************************
டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்.
நான் ஜாத்-பட்- தோடக் மண்டலுக்காக சாதியைப் பற்றி தயார் செய்திருந்த உரையைப்பற்றி தன் ''அரிஜன்'' ஏட்டில் எழுதியதன் மூலம் மகாத்மா என்னைக் கௌரவித்தமைக்கு எனது பாராட்டுக்கள்.
எனது உரை மீதான அவரது மதிப்புரையை வாசித்தபோது சாதிபற்றி நான் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு மகாத்மா முற்றிலும் வேறுபடுகிறார் என்பது தெளிவாயிற்று, தனிப்பட்ட காரணங்கள் இருந்தால்தவிர பொதுவாக என் எதிராளிகளோடு சர்ச்சையில் இறங்கும் வழக்கம் எனக்கு கிடையாது.
எனது எதிராளி ஒரு அனாமதேய அல்பாத்மாவாக இருந்திருந்தால் நானும் போனால் போகிறது என விட்டிருப்பேன், ஆனால் மகாத்மாவே என் எதிராளியாக இருப்பதால் அவர் முன் வைத்துள்ள வழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்றே கருதுகிறேன்.
அவர் எனக்கு செய்துள்ள கௌரவத்திற்காக அவரை நான் பாராட்டுகிற அதே நேரத்தில் அதை படித்தபோது எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என்பதையும் கூறியாக வேண்டும், விளம்பரத்தை தேடும் ஆசை எனக்கு இருப்பதாக மகாத்மாவே குற்றம் சாட்டியுள்ளதால் ஏற்பட்ட அதிர்ச்சி அது.
என்னை யாரும் ''மறந்துவிடக்கூடாது'' என்பதற்காக கூட்டத்தில் வாசிக்கப்படாத அந்த உரையை நான் பிரசுரித்தேன் என்று இவர் எழுதி உள்ளார்,
மகாத்மா என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம், அந்த உரையை பிரசுரித்தில் என் நோக்கம், இந்துக்கள் தங்கள் தற்போதைய நிலையைப் பற்றி சிந்திக்குமாறு தூண்டிவிடுவதுதான், நான் ஒருபோதும் விளம்பரத்திற்கு ஏங்குகிறவன் அல்ல, சொல்லப்போனால் நான் விரும்புகிற அல்லது எனக்குத் தேவைப்படுகிற அளவுக்கு மேலாகவே அது எனக்கு கிடைத்துவிட்டது.
ஆனால் ஒரு வேளை விளம்பரம் சம்பாதிக்கும் உள்நோக்கத்தோடு நான் அந்த உரையை வெளியிட்டேன் என்றே கொண்டாலும் யாரால் என்மேல் கல்லெறிய முடியும்? மகாத்மாபோல கண்ணாடி வீட்டிற்குள் வசிப்போரால் நிச்சயம் முடியாது.
************************2*******************************
உள்நோக்கம் இருக்கட்டும், என் உரையில் நான் எழுப்பிய கேள்விக்கு மகாத்மா என்ன பதில் சொல்லி இருக்க வேண்டும்? முதலாவதாக நான் எழுப்பி உள்ள பிரச்சனைகளை மகாத்மா முற்றாக புறக்கணித்துவிட்டார்.
என் உரையில் நான் இந்துக்களை அவதூறு செய்திருக்கிறேன் என்று கூறும் மகாத்தமா அதைப்பற்றி பேசாமல் வேறு எதையோ பேசிச் செல்கிறார், என் உரையை படிக்கும் எவரும் இதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
என் உரையில் நான் மெய்ப்பிக்க விரும்பிய முக்கிய கூறுகளை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1. சாதியானது இந்துக்களை சீரழித்து உள்ளது.
2. நான்கு வருண அடிப்படையில் இந்து சமூகத்தை புனர்நிர்மாணம் செய்வது சாத்தியமல்ல, ஏனென்றால் வருணமுறை ''ஓட்டைப்பனானையும் ஒழுகும் மூக்கையும் போன்றது'', அது தன் சொந்தத்தன்மையை கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சக்தி அற்றது, யார் தன் வருணத்தை மீறினாலும் அதற்கு எதிராகப் போகிற ஒரு சட்டத்தின் துணை அதற்கு வேண்டும், இல்லாவிட்டால் அந்த உள்ளார்ந்த போக்கின் காரணமாக சாதி அமைப்பாக குறுகிவிடும்.
3. விறுன முறையின் விளைவாக மக்கள் அறிவைப்பெரும் வாய்ப்பு மறுக்கப்படுவதால் அவர்களின் தரம் கெடுகிறது, ஆயுதம் தாங்கும் உரிமை மக்களுக்கு மறுக்கப்படுவதால் அவர்கள் காயடிக்கப்படுகின்றனர், எனவே நால்வருண அடிப்படையில் இந்து சமூகத்தை மறுசீரமைப்பது தீங்கு பயப்பதாகும்.
4. எந்த மதத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் எங்கு அங்கிகரிக்கப்படுகிறதோ அந்த மதத்தின் அடிப்படையில் இந்து சமூகம் மறுசீரமைய வேண்டும்.
5. இந்த நோக்கத்தை எட்டவேண்டுமானால் சாதிக்கும் வருணத்திற்கும் உள்ள மத அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும்.
6. சாஸ்திரங்களுக்கு உள்ள தெய்வீக அங்கீகாரத்தை தூக்கி எறிவதன்மூலம் மட்டுமே சாதி வருணத்தின் புனிதத்தன்மையை ஒழிக்க முடியும்.
மகாத்மா எழுப்பி உள்ள கேள்விகளுக்கும் உரையின் இந்த மையமான வாதப்போக்கிக்ற்கும் தொடர்பே இல்லாமல் இருக்கின்றது.
மகாத்மாவின் கூற்றுகளின் உட்பொருளை அடுத்த பகுதியில் ஆராய்வோம்.
********************* தொடரும்.
நூல் - சாதி ஒழிப்பு.
எழுதியவர் - புரட்ச்சியாளர் டாக்டர் B .R அம்பேத்கார்
பக்கம்- 149,150,151.
நன்றி;-
வெளியீடு - அலைகள் பதிப்பகம், 1998
மொழியாக்கம் - வெ. கோவிந்தசாமி.