முடிவில்லா பயணங்கள்...!

துரத்தும் நிஜங்களை
ஓடி ஜெயிக்கும் கனவுகளின்
நினைவுகளில் இறுகிக் கிடக்கும்
இமைகள் பிரிய மறுக்கின்றன!

அறிமுகமில்லா யார் யாரோ
என்னை கடந்து செல்லும்
என் மரண ஊர்வலத்தில்
தொடர்ச்சியாய் வரும் பால்ய
நினைவுகளை நகர்த்த முடியாமல்
காற்றில் அலைகிறது சூட்சும மனம்!

இரவையும் பகலையும் கடந்த
ஒரு வெளியில் கலைந்து திரிகையில்
கடக்க முடியாத காம நினைவுகள்
இடைவெளியற்று நிரம்பிக் கிடக்க
இரணமாய் பரவும் வலிகளை
உறிஞ்சிப் போட வழிகளற்று
அடர்ந்த இருளில் நகர்கிறது என் ஆன்மா!

சுற்றும் பூமியின் சுழலுக்குள்
சிக்கிக் கொண்ட ஏதோ ஒன்று
தொடர்புகள் அறுக்க வலிகள் அற்று
கவ்விக் கிடக்கும் கட்டற்ற வெளியில்
எங்கோ நடக்கும் கலவியில்
ஏதேனும் ஒரு பிண்டத்துக்குள்
அடைப் பட்டுப் போவேனென்று
சொல்லாமல் சொல்லிற்று
என்னைச் சுற்றிக் கெட்டிப் பட்டுக்
கிடந்த நிசப்தம்!

மீண்டும் ஏதேதோ வாசனைகள்
முடிவற்ற விருப்பங்கள்
தீண்டியும் தீண்டாமலும் செய்த
தீங்குகளின் அடுக்குகள்
எல்லாம் சேர்ந்து மெல்ல
எங்கோ நகர்த்த
முடிவற்று தொடரும் பயணத்தின்
முடிவுகளாய் எதைக் கொள்ள?
எதை வெல்ல?

எழுதியவர் : Dheva.S (7-Oct-13, 7:31 pm)
பார்வை : 300

மேலே