நூலக கிடங்குகள்

தென்றலாய் தலைகோதி,
அன்பாய் அரவணைத்து,
உச்சி முகர்ந்து,
என்னின் ஒழுக்கம்
ஓங்கவே வேண்டி,

வாய்மை,பேராண்மை,
வீரம்,கற்புநெறி,
ஈகை,இரக்கம்,
மனிதநேயம் -எனபல
கட்டுக்கட்டாய் கதைகள் சொல்ல
கேட்டவண்ணம் அவர்களுக்குள்
புதைந்துக்கொண்டு மேற்கொண்ட
நிம்மதித்துயில்கள்!


வால்தனம் முற்றியச்சமயங்களில்,
தந்தையும்,தாயும் அதட்டல்கள்போட,
நீலிக்கண்ணீர் வடித்தபடி,
பாதுகாப்புத்தேடி உட்புகுந்த
பாட்டியின் முந்தானை!

எப்பொழுதும் எனக்குச்சாதகமாகவே,
தீர்ப்பளிக்கும் என்வீட்டின்
உச்சநீதி மன்றமாய்!

புதுமழையில் ஆட்டம்போட்டு,
சொட்ட,சொட்ட வீடுவந்தால்,
இலவசஇணைப்பாய் கிடைக்கும்
பாட்டிச்சேலை முந்தானை துவட்டல்கள்!

தாத்தாவின் கைபிடித்து
பவனி வந்த மறக்கமுடியாத
தேரடிவீதிகள்!

24மணிநேரமும் எனக்காய்
சேவை செய்ய காத்திருந்த
வங்கிகள்!
தாத்தாவின் சட்டைப்பையும்,
பாட்டியின் சுருக்குப்பையும்!

தவமாய் தவமிருந்தால்
வரங்கள் கிட்டும்'
கேட்டிருப்பீர்கள்!
இங்கே வரங்களே
தவமிருந்தன எனக்காய்!
தாத்தா,பாட்டி உருவில்!

இத்தனை சுகமளித்த
என்னின் பெற்றோர்களைச்
சான்றோர் என பறைசாற்றுவேன்!

சில வெறிநாய்களை ஈன்றெடுத்து,
சீராட்டி,பாராட்டி வளர்த்தமைக்கு
பரிசாய்!

பின்னாளில்
சிக்கி சின்னாபின்னப்பட்டு
கிழித்து எறியப்பட்ட
புத்தகங்களின் குவியலாய்!
முதியோர் இல்லங்களில்
தஞ்சம்புகும் முதியவர்கள்!

எளிதில் கிடைக்காத
அறிய பல
அனுபவ புத்தகங்கள்,
தூசிபடிந்து முடங்கி கிடக்கும்
நூலகங்களாய்!

முதியோர் இல்லங்களில்!



எழுதியவர் : நவீன் மென்மையானவன் (19-Jan-11, 10:14 am)
சேர்த்தது : a.naveensoft
பார்வை : 337

மேலே