நீ நிஜமாக

அடி கண்ணே என் காதலி
எப்போதுமே
நீ நிஜமாக இருந்திருக்கிறாய் ....
நான் தான் ......
இட்டேறிக் கள்ளிப் பழத்துக்கு
இச்சைப்பட்டாய் நீ .
நானோ
ஆகாசத்து நிலாப் பழத்தை
அலுங்காமல பறித்துத் தருவதாய்
ஆசை காட்டினேன் .
களத்து மேட்டுக்
கருவேல நிழலில்
முந்தானை விரித்து நாம்
முகம் மூடிக் கொள்வோமா
என்று காதல் பேசினாய்
நானோ
வானவில்லில் ஊஞ்சல் கட்டி
மகிழ்ந்தாடுவோம் என்று
ஜாலம் காட்டினேன்
தேவை ஒரு சித்திரைக் கைத்தறிச்
சேலை என்றவளுக்கு
தினுசு தினுசாய்
மேக வண்ணப் பட்டு
விரித்து முழம் போடுவதாய்
வீரம் பேசினேன் ....
துளியூண்டு தங்கத்தில்
ஒரேயொரு
ஒற்றைக்கல் மூக்குத்தி
நீ கேட்க
அர்த்த ராத்திரி நட்சதிர
வைரக் கற்களால்
உன் அங்கமெல்லாம் நகை பூட்டுவதாக
அளந்து விட்டேன்
உனக்காக நான்
உன் வீட்டுப் புறவடையில்
அந்த தேவலோகத்துக்
காமதேனுவைக்
கட்டிப் போடத் திட்டமிட்டிருக்கையில்
நீ யந்தப்
பால்காரனோடு
பயணம் வைத்தாயே ..
கண்ணே உன்னைக்
கனவு ரத்தத்தில் கொண்டு போக
நான் காத்திருக்கையில்
ஒரு பழைய சைக்கிளில்
அவனோடு
பயணம் வைத்தாயே ...
கண்ணே என் காதலி
இப்போது தான் தெரிகிறது
எப்போதுமே நீ நிஜமாக ...
நான் தான் ...