எல்லாம் காதல் மயம்
கைகள் சிவக்கவேண்டி
மருதாணி பூசிக்கொள்ளுதல்போல்
முகம் சிவக்க
வெட்கத்தைப் பூசிக்கொண்டவளே!
--- --- ---
நல்லவேளையாக அன்று
ஆதாம் ஏவாளுக்கு
அன்னை தந்தை இருந்திருக்கவில்லை
இருந்திருந்தால்
பிறந்தவுடன்
கள்ளிப்பாலுக்கு இரையாகும்
பெண்சிசுவைப்போல
காதல் கொல்லப்பட்டிருக்கும்
--- --- ---
நீ கண்களால் கொலுத்திப்போட்ட
காதலின் ஒளியில்தான்
வாழ்வைக் கடந்துகொண்டிருக்கிறேன்
--- --- ---
அடித்துத் திருந்துதற்கு
காதல் ஒன்றும்
விடைத்தாள் அல்லவே
--- --- ---
மண்ணை வளப்படுத்தும்
மண்புழுவைப்போல
என்னை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றன
உன் நினைவுகள்
--- --- ---
பௌர்ணமியைக் கண்டாலே
கடல் பொங்கும்
உன்னை நினைக்கையிலேயே
போங்கிவிடுகின்றன விழிகள்
--- --- ---
உன்னையும் என்னையும்
உருட்டி விளையாடியது காதல்
பொறுக்காத காலம்
போட்டுடைத்து விட்டது
--- --- ---
நீயும் நானும் வினாக்குறிகளானபோது
விடையான காதலே இன்று
வினாக்குறியாகிப் போனது
விடையாகவேண்டிய நாம்
முற்றுப் புள்ளியாய்
--- --- ---
அவன் கொடுத்த தைரியத்தில்தானே
எடுத்தெறிந்து பேசுகிறாய்
என்கிறாள் அன்னை
காதல் கொடுத்த தைரியம் என்பதை
யார்சொல்லி புரியவைப்பது
--- --- ---
கடிகாரமுள்
நிகழ்காலத்தை நோக்கி
நகர்வதே போல
உன்னை நோக்கியே நகர்கின்றன
என் நினைவுகள்
--- --- ---
இன்னும் துரத்திக் கொண்டுதான்
இருக்கின்றன
உன் நினைவும்
தலை விதியும்
--- --- ---
நம் மனவுறுதியைச் சோதிக்க
இவர்கள்
பிள்ளைக் கறி கேட்டிருந்தால்கூட
பெற்றுக் கொடுத்திருக்கலாம்
காதற்கறியையல்லவா கேட்கிறார்கள்
--- --- ---
அவளை ஏன் இன்னும்
காதலிக்காமல் இருக்கிறாய் என்றென்னை
தட்டிக்கேட்ட காதல்
அவர்களை ஏன்
பிரிக்கத் துடிக்கிறீர்கள்
என்று இவர்களை
விளையாட்டுக்கூட வினவவில்லையே
--- --- ---
காதலின் வருகையும்
நாரதர் வருகையைப் போலத்தான்
கலகத்திலேயே முடிகிறது
--- --- ---
காதல் என்ன
கண்ணின் மையா
கழுவி நீக்குதற்கு
கன்னத்து மச்சம்
சுடுகாடு போகும்வரை
சுமந்துதான் ஆகவேண்டும்
--- --- ---
அன்று என்னென்னவோ பேசினோம்
எதுவுமே பேசாததுபோல்
ஒரு
ஏமாற்றமே எஞ்சியது
இன்று எதுவுமே பேசவில்லை
ஆனால்
நிறைய பேசிய நிம்மதி
--- --- ---
நிதானமாய்தான் இருந்தேன்
உன்னை காணும்வரை
இப்பொழுதோ
என்னை தளும்பவிட்டுவிட்டு
நிதானமாய் நடந்துசெல்கிறது காதல்
ஒரு நிறைகுடத்தைப் போல
--- --- ---
‘எல்லா கிளவியும் பொருள்குறித் தனவே’
நீ என்னோடு இருந்தவரையில்
இன்று என்னிடம்
வெறும் சொற்கள் மட்டுமே
உள்ளன
--- --- ---
உன்னை மறந்துவிடச் சொல்லி
வற்புறுத்தி வற்புறுத்தியே
நினைவுபடுத்திவிடுகிறார்கள்
உன்னை
--- --- ---
அவர்கள் நம்மை பிரிப்பதாய்
எண்ணிக்கொண்டு
அதிகமான நெருக்கத்திற்கு
அடிகோலி விட்டார்கள்
--- --- ---