விரக்தி எழுதும் புதுக்கவிதை

இருட்டு நிழலையும்
திருடிய தனிமை நேரமிது
சுற்றிலும் வினோத உருவங்கள்.
எழும்பும் ஒலிகளோ
எதிர்கால கேள்விக்குறிகள்.
கேள்விக்குறி சின்னங்களோ
கதிர் அரிவாளாய்
கடக்க போகும் வாழ்வு
கழுத்தை அறுக்க
கங்கனம் கட்டுகிறது.

என்ன செய்ய போகிறாய்.. ?
இன்னும் என்ன செய்ய வேண்டும் ?
சாதனையின் தூரம் எவ்வளவு ?
சோதனையின் பாரம் எவ்வளவு ?
எதை எடுத்து எதை கொடுத்தாய்?
எதை கொடுத்து எதை எடுப்பாய்?
போன மானம் என்ன ?
வரவேண்டிய மரியாதை என்ன ?
நம்பிய நண்பன் கொடுத்தது என்ன?
யாரை நண்பன் என்று நம்ப போகிறாய்?
இந்த உலகம் வினோதமா?
நீ உலகின் வினோதமா ?
போன இழப்புக்கள் என்ன சொன்னது?
வரவேண்டிய வருமானங்கள் என்ன சொல்லும்?
பெற்றவர்களின் பேர் சொல்லுமா உன் பேர்?
உன் பெயரை உச்சரிக்குமா சரித்திரம்?

அய்யகோ...! கேள்வி சாட்டைகள்
விடாமல் துரத்தி விளாசுகிறது..
மனம் கிழிந்து கிழிந்து
பிணமாய் நொந்து சாகிறது. எனை
சுற்றிலும் இம்சிக்கும் கேள்விபிடுங்கிகள்
நான் விழித்திருந்து தூங்கினாலும்
என் இமையை பிடுங்கி எறிகிறது.
என் கண்களை கனவு தீயில் எரிக்கிறது.

இந்த கேள்வி நாய்களால்
வெற்றி வெறிக்கொண்டு
நெற்றி வலி எடுக்கிறது.


இன்னும் எவ்வளவு தூரம்
அந்த கல்லறையின் ஆழம்?
இந்த வாழ்க்கையின் நேரம்?

கடவுளே................!!
எனை கடக்கவிடு...!
---------------------------------------------------
சந்தோஷ்........நீ கடவுள் மறுப்பாளன்.!

அடப்போடா...!
நான் மனிதன் மறுப்பாளன்.....!


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (10-Apr-14, 4:03 am)
பார்வை : 736

மேலே