காமம் கொள் ல்

கடும் குளிரில் கூசிப்போய் உடலை ஒடுக்கிக் கொள்வதை போல இருக்கிறது இந்த கூடலின் உச்சம்.

தியானத்தில் அமரும் போதும் இப்படித்தான். திடமான ஒரு கருங்கல்லாய் முதலில் அமர்ந்திருப்பேன். மெல்ல மெல்ல ஒவ்வொரு அடுக்காய் உடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு அடுக்கும் உடைந்து விழ கொஞ்ச நேரமாவது ஆகும். அது எப்போது என்று தெரியாது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் தடிமன் எல்லாம் படிப்படியாக உடையாமல் ஒரு கட்டிடத்தை வெடிவைத்து தகர்த்தால் எப்படி சடாரென சாயும் அப்படி சாயும். அதாவது சீட்டுகட்டு சாய்வதைப் போல ஆனால் அதன் மென்மையோடு அல்ல....

உடைந்து எல்லாம் விழுந்த பின்பு கூட இப்படித்தான் கூடலின் உச்சத்தில் ஏங்கிப் போய் உடல் துடிக்க குளிரில் கூசி ஒடுங்கும் உடம்பாய் நடு நடுங்கி தொண்டை அடைபட்டு கேவிக் கேவி அழத்தோன்றும். காமம் அழகானது என்று நான் சொல்லும் போதே வக்கிர பாம்புகள் பலரின் புத்தியில் நெளியத்தொடங்கி இருக்கும். இப்படித்தான் அது. அதன் இயல்பு இதுதான் என்று எழுத்துக்கள் மூச்சு வாங்கிக் கொண்டே ஒரு அனுபவத்தை இறக்கி வைக்கும் போது நான் இறக்கி வைத்த சுமையில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல் ஒவ்வொரு மூளையும் தத்தமது சுமையை இறக்கி வைத்து என்னவென்று பிரித்துப் பார்த்து.....

இங்கே எழுதிக் கொண்டிருக்கும் என் வரிகளுக்கு வெவ்வேறு வர்ணங்களில் கற்பித ஓவியங்களை அது வரையத் தொடங்கும். அது அல்ல நான் சொல்வது என்று சொல்லக் கூட விருப்பமில்லாமல் ஸ்பரிசித்தது கொடுத்த போதையிலிருந்து வெளிவர விரும்பாமல் கருப்பை நோக்கி விரைந்து பின்பு கருமுட்டையோடு சேர்ந்த விந்தணுவின் மோன நிலைக்குள் கிடந்தபடி எங்கிருந்தோ கேட்கும் அழுகுரலை செவிமடுத்துக் கொண்டிருப்பேன் நான். அது யாரோ ஒருவரின் மரண அவஸ்தையை சொல்லும் அப்போது பிறந்த குழந்தையின் குரலாய் இருக்கக் கூடும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது பிணமெரிந்து நிண நாற்றம் பொசுக்கென்று வீசத்தொடங்கும்.

உஷ்ணமான உணர்வொன்று இருப்பதும் இல்லாததும், சரியும் தவறும், தூய்மையும் அசுத்தமுமாய் கிடந்து, கிடந்து பின் நகர்ந்து பிறப்பின் ரகசியம் சொல்லும் கலவிக் கலையை சிம்மத்தின் பிடறி பிடித்து உலுக்கி எழுப்புவது போல எழுப்ப.... பிரபஞ்சத்தின் வாசல் இதுதானென்று அறிந்து வெறித்தனமாய் ஓடி விரிந்து, பரந்து செல்லும் ஒளிக்காட்டிற்குள் தொலைந்தே போயிருப்பேன் நான். மிச்சம் என்ன இருக்கும்? என்ற கேள்வியை உடைத்து உடைத்து மெலிதாய் பூக்கும் ஒரு பூவின் இதழுக்குள் படுத்துறங்கும் சுகத்தோடு இளஞ்சூடான அவளின் மார்பில் முகம் புதைத்து ஜென்மங்கள் மறந்து, இச்சைகள் கலைந்து, திறக்க விரும்பாத விழிகளால் விரிந்து கிடக்கும் போதியின் கிளைகளுக்குள் ஒரு கருநாகமாய் ஊர்ந்து சென்று....

அதன் உச்சம் தொட்டு சகஸ்ரகம் உடைந்து பேரருவியாய் வழிந்தோட இதுவன்றோ நான் என்ற ஞானத்தை கிசுகிசுப்பாய் அவளின் காதுகளில் சொல்லிவிட்டு அப்படியே மூர்ச்சையாகத்தான் ஆசை....!

ஆனால்....

ஆசை என்ற வார்த்தை ஒரு சகுனியைப் போல வெகுண்டெழுந்து மீண்டும் ஒரு தாயமாடிப் பார்க்கும். அது பாண்டவர்களின் கண்ணடைத்து திரெளபதியின் துயிலுரிந்த துச்சாதனத்தை உயிர்த்தெழச் செய்யும். பரமாத்மாக்கள் ஆடை கொடுத்து மீட்டு விட்டால் பாரதம் முடிந்தன்றோ போகும். இது முடியக் கூடாத ஆட்டமன்றோ?! சத்தியத்தை தோற்கவைத்து அசத்தியத்தை வெல்ல வைத்து, மீண்டும் சத்தியத்தை வெல்லவைத்து முடிந்தே போய்விடக்கூடாது என்று மீண்டும் மீண்டும் நிகழும் ஆட்டம்.

அவள் உதடுகள் நெற்றியை அழுத்தமாய் முத்தமிட்ட பொழுதினில் மூர்ச்சை தெளிந்து விழித்து மீண்டும் கேவிக் கொண்டிருக்கையில் எழுந்த கேள்வி ஒன்றைத்தான் யுகங்கள் தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறது இக்காலம்....

நான் யார்..? இவள் யார்...? காமம் கொள்வதென்பது பல்கிப் பெருகவென்றால் சுருங்கி முடிந்து போக விரும்புவது யார்? முக்தி என்ற சொல்லுக்குள் முடங்கிப் போய் இச்சை செதுக்கி, காமம் ஒதுக்கி எல்லாம் கடந்து போய் எங்கோ சேரும் ஆவலும் இதற்கு ஏன்? தொடங்கவும் அது விரும்புகிறது..... முடியவும் அது விரும்புகிறது....! நிகழவும் அது விரும்புகிறது அழியவும் அது விரும்புகிறது! கோட்பாடுகளைச் சொல்லி இதுவென்று நிறுவிக் கொள்ள எந்த ஒரு சாத்தியமுமில்லா அறுதியே..... எதன் இறுதி நீ...?

கேவிக் கேவி அழத் தொடங்கினேன்...! அவள் மீண்டும் என்னை மார்போடு இறுக்கிக் கொண்டாள்....

நின்று போயின நிமிடங்கள்!

இப்படியே சென்று விடேன் காலமே... என்று கெஞ்சவேண்டும் போலிருந்தது எனக்கு.........! அவளின் மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டே மீண்டுமொரு புணர்தல் பற்றிய கற்பனையோடு கடவுளோடு விளையாடிக் கொண்டிருந்தேன் நான்....!

எழுதியவர் : Dheva .S (12-May-14, 10:34 pm)
சேர்த்தது : Dheva.S
Tanglish : kamam kol l
பார்வை : 507

சிறந்த கட்டுரைகள்

மேலே