மாயம், மாயை, பொய்மை, இன்மை- தமிழோடு

மாயம், மாயை, பொய்மை, இன்மை- தமிழோடு

இக்கட்டுரையின் செறிவுகள் யாவும் “உலகம் சுற்றுகிறது” என்னும் நூலில் இருந்து ஆசிரியர் கா.அப்பாத்துரையார், பதிப்பாளர் என்.சுபா “நெய்தல் பதிப்பகம்” திருவல்லிக்கேணி சென்னை-5, எடுத்தியம்பியது ஆகும்.

உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் உயரமான இடத்தில் நின்று கொண்டி ருக்கும் போதோ, அல்லது ஏதேனும் இராட்டினத்தில் (சுழல்) சுற்றும்போது தலை சுற்றுகிறதா?
ஆம் என்று சொல்பவர்கள், அந்த மாதிரி சமயங்களில் அதை தவிர்த்து விட விரும்புகிறார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல இரத்தமும் சதையுமான பல வகை உயிரினங்களுக்கும் ஏற்படுபவைதான்.
எதற்காக இந்த கேள்வி? எனில் உண்மையிலேயே நாம் சாதாரண நிலையிலேயே நாம் சுழன்று கொண்டேதான் இருக்கிறோம், ஆனால் அவை நம் கண்ணுக்கு தெரிவதில்லை. அதுதான் உண்மை.
இதற்கு விளக்கம் சொல்வதற்கு முன் தமிழ் மொழியில் இத்தகைய நிலையை எங்கனம் நமக்கு எடுத்திய்மபுகிறது என்னும் விளக்க உரையை சற்று பார்க்கலாம்.
“மாயம்” என்பது மாயையைல்ல - மாயம் என்பது வேறு, மாயை என்பது வேறு
பொய்மை இன்மையல்ல - பொய்மை என்பது வேறு, இன்மை என்பது வேறு
மாயை என்பது ஒரு திரை, மாயம் என்பது திரைக்காட்சி (திரையில் காண்பிக்கப்படும் மெய்மையின் நிழலொளி வண்ணம். அது உண்மியயிய மறைப்பதன்று.
மாயையும், மாயமும் மெய்மையை அடைவதற்குரிய வழிகள்.வாயில்கள். இவைகள் பொய்மைகள் ஆகாது.
மாய உணர்வு மூலம் புத்துணர்வு பெற்றவனுக்கு, அப்புத்துணர்வு பெறாத முந்தைய நிலை அறிவுதான் “பொய்மை” ஆகிறது. ஆனால் பொய்மை என்பதன் சரியான பொருள் “இன்மை” அல்ல ‘அன்மையே’
மயக்கம், மருட்சி, மாறாட்டம் இவையே மாயையையின் ‘பொய்மை’ தோற்றத்தின் படிகள்
மாயம், மருட்கை, தெருட்சி, இவை ‘புத்தறிவு’ அல்லது மெய்மையின் மலர்ச்சி படிகள்.
மருட்சி- கீழ்தளம் ஐம்புலங்களின் மயக்கறாதது
மருட்கை-மேல்தளம் ஐம்புலங்கடந்த ஆறாம் புலன்
மருட்சிக்கும், மருட்கைக்கும், இடையேயுள்ள மலர்ச்சி தொடர்பை “மருள்” என்னும் வேர்ச்சொல் இருக்கிறது
இந்த இரு தள உணவுகளை உணர்ச்சி, மெய்யுணர்வு இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பை “உணர்” என்னும் வேர்ச்சொல் குறித்து காட்டுகிறது.
சரி இனி மேல் கூறப்பட்டுள்ள சுழலுக்கு வருவோம்.
நிலவுலகம் (பூமி) பம்பரம் போல் விரைவாக வேகமாக சுற்றியபடியே சுழன்றோடுகிறது. ஆயினும் இந்த ஓட்டத்தை, விரைவை, விசை வேகத்தை, நாம் நேரடியாக காண்பதில்லை, உணர்வதில்லை. இயற்கை அதன் மீது திரையிட்டு மறைக்கிறது. ஐம்புல உணர்வு அதனை நமக்கு காட்டுவதில்லை.
பம்பரத்து இருவகை சுழற்சி உண்டு, தன்னைத்தானே விர்ர்…விர்ர்.. என்று சுற்றியபடி சுழல்கிறது.இவ்வாறு சுற்றி சுழன்று கொண்டே அது நிலத்தின் மீதும் வட்டமாக சுழித்தோடுகிறது. இவ்வியக்கத்தை நாம் தற் சுழற்சி, வட்ட சுழற்சி என்கிறோம்.
நிலவுகத்திற்கும் (பூமி) இவ்வாறு இரு வகை சுழற்சி உண்டு. தன்னைத்தானே 1000 கல் வேகத்தில் சுழல்கிறது, இவ்வாறு தன்னையே சுற்றி வர 24 மணி நேரம் பிடிக்கிறது, இப்படி சுழன்று கொண்டே சூரியனை வானவெளியில் ஒரு நெடுநீள வட்டமாக சுழித்தோடுகிறது. இந்த சுழற்சியின் வேகம் தற்சுழற்சியின் வேகத்தை விட பல மடங்கு பெரியது. நொடிக்கு 181/2 கல், அதாவது கணத்துக்கு 1110 கல், அல்லது மணிக்கு 66,6000 கல் வீதம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இவ்வேகத்தில் கதிரவனை வட்டகரமாக சுற்றி வர ஓர் ஆண்டு ஆகிறது. இது சுற்றிவரும் நீள் வட்டத்தின் சுற்றளவு 58 கோடியே 38 இலட்சத்து 12 ஆயிரத்து 196 கல் தொலைவு ஆகும். இது நம் கற்பனையின் கற்பனைக்கும் எட்டாத தொலைவு ஆகும்.

வேகம் கடந்த வேகத்தில் இரு வகை சுழற்சிகளிலும் நிலவுலகம் (பூமி) இரவு பகலாக ஓய்வொழிவில்லாமல் என்றும் எப்போதும் சுற்றி சுழன்று கொண்டே தான் இருக்கிறது.
இனி இக் கட்டுரை சுட்டி காட்டும் பகுதிக்கு வருவோம். இந்த நிலவுலகம் (பூமி) எப்போதும் சுழன்றும் சுற்றி சுழன்று கொண்டும் இருக்கும் போது இதன் மீது வாழும் மனித இனத்தவர் மட்டுமல்லாது, நம்மை சுற்றியுள்ள உயிரினங்கள், மரம் செடி கொடிகள், மலைகள், காடுகள், பாலைவனங்கள், ஆறுகள், ஏரி குளங்கள் கடல்கள்-இயங்கும் பொருட்கள், இயங்கா பொருட்கள் எல்லாமே இடையின்றி வட்டமிட்டு சுழன்றவண்ணமே தான் இருக்கிறது.
இந்த சுழற்சி நம் வாழ்வுடன் வாழ்வாக எண்ணத்துடன் எண்ணமாக இயங்கி வருகிறது. நீரில் வாழ்ந்தும் நீரறியா மீன் போல காற்று வெளியிலி -யங்கும் காற்றை எண்ணிப்பாராத பறவை போல நம் வாழ்வின் வாழ்வான எண்ணத்தின் எண்ணமான ‘இச்சுழற்சி’ இயக்கத்தை உணர்வதில்லை.
உதாரணமாக சொல்வதென்றால் மிகப்பெரிய பம்பரத்தின் மீது வாழும் மிக மிக சிறிய சிற்றெரும்பின் நிலை, சிறு தூசின் நிலைதான் நம் வாழ்வு.
ஐம்புல உணர்வு “மெய்மை” முழுவதையும் நமக்கு காட்டுவதில்லை, இதை உணர்ந்தவர்கள், இதை எண்ணி பார்த்து பிறரையும் எண்ணிப்பார்க்க தூண்டியவர்கள் இம்மாய ஊனர்வை எழுச்சி பாடலாக பாடினார்கள்.
அடுத்து கண் முன் உள்ளவற்றையே நாம் காண்கிறோம், அதே போல் அருகில் (கேட்கும் அளவில்) ஏற்படும் ஓசையையே கேட்கிறோம். அருகில் உள்ளவற்றின் ‘மணத்தையே’ முகர்கிறோம். இவையனைத்தும் நாம் உண்ர்வது சின்னஞ் சிறு பகுதி மட்டுமே. உணராதது ‘பெரும்பகுதி’ என்பதை உணரமுடிகிரது.
காணும் காட்சியை பார்ப்போம். நாம் காணும் யானை, மலை இவைகளை எறும்புகள் காண முடியாது, அதே போல் எறும்பின் கண்ணில் தெரியும் சிறு தூசை, தூசினும் சிறிய அணுக்களை நம்மால் காண முடியாது. ஆயினும் கண்ணாடி மூலம் அத்தகைய பொருள் உயிரினம் உண்டு என்று அறிகிறோம்.
அடுத்து ஒரு புலன் அறிவதை மறு புலன் அறியமாட்டாது. காற்று இயங்குவதை நாம் ‘இலை அசைவால்’ காண்கிறோம். அது ‘மெய்’ என்று உடல் உணர்த்துகிறது. ஆனால் ‘கட்புலன்’ அதை காண நமக்கு உதவுவதில்லை. அதாவது மனிதன் காணும் உலகம் ஐம்பொறி காட்சிகளுக்கு உட்பட்ட உலகம், அதுவும் அவன் புலனளவுக்கு உட்பட்ட உலகம் மட்டுமே. அவன் அறியா உலகமே எல்லையற்று பரந்து கிடக்கிறது.
ஒளிக்கத்திரின் வண்ணப்பட்டையில் காட்சிக்கு புலப்படுபவை ஊதா, அவுரி நீலம், பச்சை, கடல் நீலம், மஞ்சள், செம்மஞ்சல், சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்களே இவற்றை அடுத்துள்ள இப்பால் ஊதா நிறம் (Ultra-violet) அப்பால் சிவப்பு (infra-red) இவைகளை நம் கண்கள் நமக்கு காட்டுவதில்லை.
இது போல, மயக்கம், மருட்சி, மாறாட்டம் ஆகிய இந்நிலைகளை, பொருளிலும், பண்பிலும், சுவையிலும், பலவிதமாக காண முடியும்.
பொருள், பண்பு, இயக்கம், திசை, ஆகியவைகளில் நாம் வாழ்வில் காணும் மற்ற மயக்கம், மருட்சி, மாறாட்டங்களெல்லாம், மாயைகளல்ல, மாயதோற்றங்கள். ஏனென்றால் இவை தோற்றங்கள் மட்டுமே என்பதை அனுபவத்தால் அறிகிறோம்.
ஆனால் நிலவுலக இயக்கத்தில் (பூமி) வாழ்க்கையில் காணும் தோற்றங்களை நாம் பொதுவாக மாயமாக கொள்வதில்லை, ‘மெய்மையாகவே’ கொண்டு விடுகிறோம். இந் நிலையே மாயையாகும்.இது சார்ந்தவையே பொய்மை நிலைக்குரிய மயக்கம். மருட்சி, மாறாட்டங்கள், அறிஞர் அறிவும் ஆராய்ச்சியும் இம் மாயத் திரையிலே மெய்மையின் நிழலொளி கண்டு இம் மயக்கம், மருட்சி, மாறாட்டங்களையே மாயம், மருட்கை, தெருட்சிகளாக்கி வருகின்றது.
‘தெருட்சி’ தரும் மெய்யறிவு கதிரொளி போன்றது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-May-25, 11:41 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே