ஆச்சி கதை

யாதொன்றிற்கும் நீ உண்டு
அரவணைப்பு தானே உன் பண்பு
என் கண்ணில் தூசி விழுந்த உடன்
உன் கண்ணீரில் வந்து துடைப்பதுண்டு
நெய்யும் எண்ணையும் நீ கலந்து
மினுமினுப்புடன் முறுகல் தோசை சுட்டு
பள்ளி பேருந்து வாசலில் ஓசை எழுப்ப
ஓசையில்லாமல் என் வாயில் திணிப்பதுண்டு
ஆடம்பர துணிமணிகளை நன்னாளில்
உடுத்து மகிழ்ந்து கொண்டாடும் பொழுது
நிறம் தரம் குணம் விலை மாறி இருக்கும்
உன் விரல் மஞ்சள் கரை மட்டும் மாறாது
வளரும் பருவம் நித்தம் நித்தம்
பலபல சங்கதிகளின் புது அனுபவத்தை
உன் மடியில் தலை வைத்து ஒப்பித்து
நல்லது கெட்டது நாங்கள் தெரிவதுண்டு
வாழ்வின் படிக்கட்டுகளில் நகரும்போது
கட்டங்கள் புகைப்படமாய் பதியும் பொழுது
உன் முகம் அவற்றில் தெரிவதுபோல் உடன்
என் நெற்றியில் நீ பூசும் விபூதி பிரகாசமுண்டு
நான் உன் நிழலில் வளர்ந்தது போல
என் குழந்தைகளும் வளர்ந்து ஆளாகி
அவர்கள் குழந்தைகளும் வளரும் பாக்கியம்
கிடைத்தால் வாழ்வில் என்ன குறையுண்டு